டெல்லி: இந்தியப் பொருளாதாரப் பிரச்னைகளைப் பற்றி அன்றாடம் கூலி வேலை பார்த்து கஞ்சி குடிக்கும் பாமர மக்கள் கூட ஆர்வத்துடன் விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு பொருளாதார சூழ்நிலைகள் மோசமாக இருக்கின்றன. இந்த மோசமான சூழலை மாற்ற மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாக அந்நிய நேரடி முதலீடுகளுக்கான வரம்புகள் நான்கு துறைகளில் மேற் கொண்டு தளர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் கூடுதலாக முதலீடு செய்ய வழி வகை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அந்நிய நேரடி முதலீடுகளுக்கான உச்ச வரம்பு டிஜிட்டல் மீடியா துறைக்கு 26 சதவிகிதமாகவும், நிலக்கரி சுரங்கப் பணிகள், ஒப்பந்த உற்பத்தியாளர்கள் துறை மற்றும் சிங்கில் பிராண்ட் சில்லறை வியாபாரத் துறைகளுக்கு 100 சதவிகிதமாகவும் அதிகரித்து இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் ஒரு சிறிய சுணக்கம் இருக்கிறது. அதனால் தான் முதலீடுகளை அதிகரிக்க இப்படி சில முடிவுகளை எடுத்து இருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் மத்திய வணிக அமைச்சர் பியுஷ் கோயல்.
சிங்கில் பிராண்ட் சில்லறை வியாபாரத் துறையில் 100 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடுகளைக் கொண்டு வருவதோடு, நம் உள்ளூர் வியாபாரிகள் பயன் பெறும் விதத்தில் ஒரு விஷயத்தையும் செய்து இருக்கிறார்கள். இந்த சிங்கில் பிராண்ட் சில்லறை வியாபார நிறுவனங்கள் இனி 30 சதவிகித பொருட்களை உள்நாட்டிலேயே வாங்க வேண்டும் என்கிற விதியையும் சேர்த்து தான் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள்.
மிக முக்கியமாக சிங்கில் பிராண்ட் சில்லறை வியாபாரிகளும் இனி ஆன்லைனில் தங்கள் பொருட்களை விற்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்களாம். முன்பு சொல்லி இருந்தது போல கடை போட்டு தான் வியாபாரம் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள் மத்திய அரசு தரப்பினர்கள்.
அதோடு 60 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய 6,268 கோடி ரூபாய் மானியத்தை அரசு கொடுக்கும் எனவும் சொல்லி அதிரடி காட்டி இருக்கிறார்கள். இந்த மானியம் நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமாம். இந்தியாவில் 162 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் உள்ளதாம். அதில் இருந்து தான் 60 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப் போகிறார்களாம்.