இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 2வது முறையாகப் பதவியேற்றிய போது பல கனவுகள் உடன் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் முதல் 5 வருட ஆட்சியில் செய்ததைப் போலவே சரியான திட்டமிடல், அறிவிப்புகளின் எதிரொலி என்னவாக இருக்கும் என்பதைச் சற்றும் உணராமல் பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல மக்களின் வேலைவாய்ப்பு, பல முக்கியத் துறைகளின் வளர்ச்சி, முதலீட்டாளர்களின் பணம் என அனைத்தும் கேள்விக்குறியாக நிற்கிறது.
முக்கிய வரி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது அணியின் ஆய்வுகள் மூலம் சூப்பர் ரிச் இன்வெஸ்டர்ஸ் அதாவது பெரு நிறுவனங்கள், பெரும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகளுக்குக் கிடைக்கும் லாபம் மீது கூடுதல் வரியை விதிப்பதாகப் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தார்.
இது எதிரொலி எப்படி இருக்கும் எனச் சற்றும் யோசிக்காமல் நிதியமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது தற்போதை நிலையைப் பார்க்கும் போது தான் நமக்குத் தெரிகிறது.
பங்குச்சந்தை
பட்ஜெட் அறிவிப்பு விதிக்கப்பட்ட கூடுதல் வரியின் காரணமாக மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை, சென்செக்ஸ், நிப்டி என அனைத்து சந்தைகளிலும் முதலீட்டாளர்கள் அதிகளவிலான நஷ்டத்தைச் சுமார் 49 நாட்கள் சந்தித்தனர்.
இதுமட்டும் அல்லாமல் இந்திய ரூபாய் ஆசிய சந்தையிலேயே மிகவும் மோசமான நாணயம் என்ற நிலையும் அடைந்துள்ளது.
எதிரொலி
பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரி அன்னிய நிறுவன முதலீட்டாளர்களையும், தனிநபர் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களையும் அதிகளவில் பாதித்தது. இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் குவிய முக்கியக் காரணம் இந்தியாவில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்பதும், ரூபாய் மதிப்பு டாலர் அளவை விடக் குறைவாக இருப்பதே.
இந்த அறிவிப்பின் மூலம் கடுப்பான அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் செய்திருந்த முதலீட்டை அதிகளவில் வெளியே எடுத்தனர். இதனால் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை ரத்த வெள்ளத்தில் மிதந்தது.
22.5 பில்லியன் டாலர்
இந்தியாவில் முதலீட்டு செய்யும் அன்னிய முதலீடுகள் அனைத்தும் டிரஸ்ட் மற்றும் அசோசியேஷன் முறையிலாகவே முதலீடு செய்யப்படுகிறது. ஆகையால் வரி கணக்கிடும் போது அந்த அமைப்புகள் தனிநபராகத் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதனால் அன்னிய முதலீட்டின் மீது கூடுதல் வரி சுமத்தப்பட்டது.
பட்ஜெட் அறிவிப்பிற்குப் பின் இந்திய சந்தையிலிருந்து சுமார் 22.5 பில்லியன் ரூபாய் தொகை வெளியேறியுள்ளது. இவை அனைத்தும் 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டு 50 நாட்களுக்குள் நடந்துள்ளது.
நஷ்டம்
22.5 பில்லியன் ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடுகள் வெளியேறிய காரணத்தால் இந்திய பங்குகளின் மதிப்பு சுமார் 14.7 டிரில்லியன் ரூபாய் அளவில் சரிந்து முதலீட்டாளர்களைக் கண்ணீர் வடிக்கச் செய்துள்ளது. இது ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரையில் நடந்தது.
லாப இலக்கு
நிர்மலா சீதாராமன் அறிவித்த கூடுதல் வரியின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருமானம் 14 பில்லியன் ரூபாய் தான். ஆனால் தற்போதும் நாம் இழந்துள்ளது 15 டிரில்லியன் ரூபாய்.
இதைச் சமாளிக்க முடியாத நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதியமைச்சகம் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்த கூடுதல் வரியை திரும்பப்பெற்றது.
இதன் மூலம் பழைய நிலைக்கே வரி அளவுகள் திரும்பியுள்ளது.