ஆட்டோமொபைல் துறைக்கு இது சனி திசை போல. தொடர்ந்து கடந்த ஒன்பது மாத காலமாக விற்பனை சரிவு, வேலையை விட்டு ஊழியர்களை தூக்குவது என ரணகளமாக இருக்கிறது. இப்போது அந்த வரிசையில் ரெனால்ட் இந்தியாவும் இணைந்து இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை சரிந்து இருப்பதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகளே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஆறுதல் தரும் ஒரு விஷயமும் இருக்கிறது.
இந்த விற்பனை சரிவைக் காரணம் காட்டி தாங்கள் யாரையும் வேலையில் இருந்து நீக்கவில்லை எனவும் சொல்லி இருக்கிறார் ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கட்ராம் மாமிலபள்ளி.
விற்பனை சரிவு
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, கடந்த ஆண்டை ஒப்பிடும் போது சுமாராக 17 - 20 சதவிகிதம் வரை சரிந்து இருக்கிறது. தற்போது இந்திய ஆட்டோமொபைல் துறையில் நிலவும் மந்த நிலையும், தேக்கமும் எங்களையும் பாதித்து இருக்கிறது என ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கட்ராம் மாமிலபள்ளியே சொல்லி இருக்கிறார்.
2.4% மட்டும்
இந்தியாவின் ஒட்டு மொத்த கார்கள் சந்தையில் ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் பங்கு 2.4 சதவிகிதமாக இருக்கிறது. எனவே ரெனால்ட் இந்தியா நிறுவனம் பெரிய சிக்கலில் எல்லாம் சிக்கிக் கொள்ளாமல் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறது எனவும் முதன்மைச் செயல் அதிகாரியே சொல்லி இருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்தமாக 86,000 கார்களை விற்று இருக்கிறார்களாம்.
2 ரகம்
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தில் இரண்டு ரக கார்கள் தான் நல்ல விற்பனை வால்யூம்களை தந்து கொண்டு இருக்கிறதாம். ஒரு எஸ் யூ வி ரக காரும், ஒரு சிறிய ரக காரும் தான் அதிக விற்பனை ஆகும் ரகங்களாம். ஆனால் தற்போது ரெனால்ட் இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கும் அளவில் இந்த இரண்டு ரக கார்களும் விற்பனை ஆகவில்லை என கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் நிறுவன அதிகாரிகள்.
புதிய மாடல்
சமீபத்தில் தான் ரெனால்ட் இந்தியா நிறுவனம் தன்னுடைய புதிய எஸ் யூ வி ரக ட்ரைபர் (Triber) காரை அறிமுகப்படுததியது குறிப்பிடத்தக்கது. சரி ஏன் விற்பனை குறைந்தது எனக் கேட்டால் "இந்தியாவின் நகர் புறங்களில் கேப் வசதி கூடியதைச் சுட்டிக் காட்டுகிறார். அதிலும் பெரும்பாலான மக்கள் தங்கள் ரெய்டை ஷேர் செய்கிறார்கள். இதனால் கார்கள் விற்பனை பாதித்து இருக்கிறது" என அடிக் கோடு போட்டுச் சொல்கிறார்.
டீலர்கள்
இந்த பொருளாதார நெருக்கடியையும், குறிப்பாக ஆட்டோமொபைல் துறையின் சிக்கல்களையும் சமாளிக்க இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம், அரசிடம் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கச் சொல்லிக் கேட்டு இருக்கிறார்களாம். ரெனால்ட் இந்தியா நிறுவனம் தன்னளவில் இந்த பிரச்னையை சரி செய்ய, இந்திய கிராம புறங்களைக் குறிவைத்து பல புதிய டீலர்களை கொண்டு வரப் போகிறார்களாம்.