மும்பை : ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட்டை இழந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வோடபோன் ஐடியாவும் ஒன்று.
இந்த நிலையில் வோடபோன் நிறுவனம் பெரும் நஷ்டத்தையே கண்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை எனில், ஜியோவை சமாளிக்க முடியாத வோடபோன், தன்னுடன் பலரை கூட்டணிக்கு சேர்த்துக் கொண்டது.
குறிப்பாக வோடபோன் குழுமம் 45.1 சதவிகித பங்குடனும், ஆதித்யா பிர்லா குழுமம் 26 சதவிகித பங்குடனும், மலேசியாவைச் சேர்ந்த ஆக்ஸியாட்டா குழு பெர்ஹாட் நிறுவனம் 8.17 சதவிகித பங்கினையும் வைத்துள்ளன. இன்னும் பல இந்த கூட்டணியில் அடங்கும்.
நஷ்டம்
இந்த நிலையில் முதல் தசாப்பத்தில் முதன் முறையாக ஆதித்யா குழுமம் நஷ்டத்தினை கண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்த குழும நிறுவனம் கடந்த நிதியாண்டில் 6,134 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 5,414 கோடி ரூபாயாக நிகர லாபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன் ஐடியாவை தவிர, இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 8,470 கோடி ரூபாயாக இந்த நிறுவனம் கூறியுள்ளது. இது முன்னதாக 9,582 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் காலாண்டிலும் இப்படி தான்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் இதே நிலைதான் காணப்பட்டது. குறிப்பாக கடந்த ஏப்ரல் - ஜூன் 2019 வரையிலான காலாண்டில், இந்த குழும நிறுவனங்கள் 3,329 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டது குறிப்பிடத்தக்கது. இது இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 2,004 கோடி ரூபாய நிகர லாபத்தை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லாபம் தான்
இதில் வேடிக்கை என்னவெனில் வோடபோன் ஐடியாவைத் தவிர, இந்த முதல் காலாண்டில், ஆதித்யா குழுமத்தின் நிகரலாபம், 1,545 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 1,748 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடன் அதிகரிப்பு
இதே போன்று டெல்கோ நிறுவனமும் கடந்த நிதியாண்டில் 14,604 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 4,874 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் கடன் பிரச்சனையும் சற்று அதிகரித்திருப்பதை காண முடிகிறது. குறிப்பாக வோடபோன் ஐடியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் கடன் தொகை அதிகரித்துள்ளது.