இந்தியாவில் தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சில பல பிரச்சனைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் காஷ்மீர் பிரச்சனையால், தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான நிலையே நிலவி வருகிறது.
இந்த நிலையில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. அதிலும் கடந்த அக்டோபர் 2018 லிருந்து ஒப்பிடும்போது, கடந்த 10 மாதத்தில் இல்லாத அளவுக்கு அதிகளவிலான முதலீடுகள் வெளியேறியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs), 2.19 பில்லியன் டாலர் மதிப்பிலான, பங்குகளை இந்திய சந்தைகளில் விற்பனை செய்துள்ளது கவனிக்கதக்கது.
இதே கடந்த ஜூலையில் 1.93 பில்லியன் டாலர் மதிப்புள்ள அன்னிய முதலீடுகள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் கடந்த அக்டோபரில் 3.75 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வெளியேறியுள்ளனர் என்பது கவனிக்கதக்கது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேறினாலும், கடந்த ஆண்டு முழுவதும், 7.21 பில்லியன் டாலர் மட்டுமே வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் பல எளிதான நாணயக் கொள்கைகள் இருந்த போதிலும், பல காரணங்கள் இந்தியாவில் முதலீடுகள் செய்ய காரணமாக அமைந்தன. இது போன்ற சாதகமான முடிவுகள் இந்தியாவில் முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக உலக அளவில் குறைந்த வட்டி விகிதம், மற்றும் குறைந்தபட்ச அரசியல் அபாயங்கள் உள்ளிட்ட பல காரணங்கள், இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் தீபக் ஜசானி இது குறித்து கூறுகையில், இந்தியாவில் உள்ள அதிகப்படியான வரி அதிகரிப்பு விகிதங்கள் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயை பாதிக்கும் என்றும், அதேசமயம் உள்நாட்டில் அமெரிக்க - சீனா வர்த்தகப் போரால், மற்ற நாடுகளில் அதன் தாக்கமும் இதில் அடங்கும் என்றும் முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் குறித்த அன்னிய முதலீட்டாளர்களின் பார்வை மோசமானதாகவே இருக்கும். இந்த பொருளாதார வளர்ச்சி ஒரு நம்பக தன்மையை ஏற்படுத்தாத வரை, அடுத்த ஒன்றிரண்டு காலாண்டுகளுக்கு இந்த பிரச்சனை தொடரும் என்றும் கூறப்படுகிறது.