கடந்த ஐந்து ஆண்டு காலங்களில், இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான காலத்தில் தான் மிகக் குறைந்த வளர்ச்சி கண்டு இருக்கிறது.
போதுமான முதலீடுகள் வராதது, தேவைகள் குறைந்தது போன்றவைகள் தான் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு காரணம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
இன்று மாலை 2019 - 20 நிதி ஆண்டுக்கான, தன் முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி விகிதங்களை மாலை 5.30 மணி அளவில் வெளியிடப் போகிறது மத்திய அரசு. இந்த ஜிடிபி வளர்ச்சி குறித்து யார் என்ன எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்..? வாங்க பார்க்கலாம்.
பொருளாதார சர்வே
இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தாக்கல் செய்த முதல் பொருளாதார சர்வேயில் 2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார். அதோடு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் நிலவும் சிக்கல்கள் தான் இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு காரணம். கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.5 சதவிகிதமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி கண்டிருப்பதாகவும் சொல்லி இருந்தார்.
ஆர்பிஐ
இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐ தன்னுடைய ஆகஸ்ட் மாத பணக் கொள்கைக் கூட்டத்தில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2019 - 20 நிதி ஆண்டில் 6.9 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்து இருந்தது. அதே நேரத்தில் 2019 - 20 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான முதல் அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிகிதமாகவும், அடுத்த அக்டோபர் 2019 - மார்ச் 2020 வரையான அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் கணித்து இருந்தது.
சி எல் எஸ் ஏ
2019 - 20 நிதி ஆண்டில், இந்தியாவின் முதல் காலாண்டு ஜிடிபி தரவுகள் இந்தியாவில் நிலவும் மந்தமான வளர்ச்சியை உறுதிப்படுத்தும். ஏற்கனவே மாதாந்திர விவரங்கள் இந்தியாவின் பலவீனமான தேவையைக் காட்டி இருக்கிறது. இந்த மந்த நிலை இரண்டாவது காலாண்டிலும் தொடரும் எனவும் பயமுறுத்தி இருக்கிறது. முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவிகிதத்தைத் தாண்டாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியா ரேட்டிங்ஸ்
2019 - 20 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.7 சதவிகிதத்தில் மட்டுமே வளரும். இந்தியாவில் நுகர்வு குறைந்து இருப்பதும், தொழிற் துறை வளர்ச்சி குறைந்து இருப்பதையும் காரணமாகச் சொல்கிறார் இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர் சுனில் குமார் சின்ஹா. ஏப்ரல் 2019 - ஜூன் 2019 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவிகிதமாக இருக்கலாம் எனவும் கணித்து இருக்கிறார்.
மூடீஸ் இன்வெஸ்டார் சர்வீசஸ்
2019 - 20 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.2 சதவிகிதத்தில் மட்டுமே வளரும். இதற்கு காரணமாக குறைந்த அளவிலேயே ஆட்களை வேளைக்கு எடுப்பது, இந்திய கிராம புற வீடுகளில் இருக்கும் அழுத்தம், இந்தியாவில் நிலவும் சிக்கலான நிதி நிலை போன்றவைகளைச் சொல்கிறார்கள். இதற்கு முன்பு மூடீஸ் நிறுவனம், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும் எனச் சொல்லி இருந்தார்கள்.
க்ரிசில்
உலகின் முக்கிய அனலிஸ்ட் நிறுவனங்களில் ஒன்றான க்ரிசில் நிறுவனம் இந்தியாவின் 2019 - 22 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியை 6.9 சதவிகிதமாக நிர்ணயித்து இருக்கிறார்கள். இதற்கு காரணமாக மோசமான வானிலை, உலக பொருளாதார மந்த நிலைகளைச் சொல்கிறார்கள். இந்திய பொருளாதாரம் முதல் அரையாண்டில் மந்த நிலையில் இருந்தாலும், அடுத்தடுத்த வட்டி விகித குறைப்பு, நுகர்வு போன்ற காரணங்களால் அடுத்த அரையாண்டில் நிலை கொள்ளும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
மற்றவர்கள்
2019 - 20 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி இவ்வளவு இருக்கலாம் என பல நிறுவனங்கள் கணித்து இருக்கிறது. யூ பி எஸ் குழுமம் 6.7 %, ஏ என் ஜி குழுமம் 6.2%, நோமுரா நிறுவனம் 5.7 % என பல கணிப்புகளைக் கொடுத்து இருக்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் இந்தியாவின் 2019 - 20 நிதி ஆண்டில் முதல் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி மேலே சொல்லி இருக்கும் கணிப்புகளோடு ஒத்துப் போகிறதா என தெரிந்து விடும்...? மத்திய அரசுக்கு இப்போதே பல்ஸ் எகிறிக் கொண்டு இருக்கும்.