டெல்லி : பல பொருளாதார நிபுனர்களும் வல்லுனர்களும், பல ஆராய்ச்சி நிறுவனங்களும் கணித்தது போலவும், உள்நாட்டில் உற்பத்தி வளர்ச்சியானது ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை கண்டுள்ளது கவனிக்கதக்கது.
ஆமாங்க.. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாட்டின் மொத்த ஜி.டி.பி விகிதம் 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு மோசமான வீழ்ச்சி கண்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.
குறிப்பாக ஜி.டி.பியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி, பருவமழை காரணமாக விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு, இதுதவிர முக்கிய உற்பத்தி துறைகளில் ஏற்பட்டுள்ள சரிவே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஜிடி.பி விகிதம் 6.9 சதவிகிதமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் இது நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 5.8 - 6.6 சதவிகிதமாக என்றும், பின்பு நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் 7.3 - 7.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் பொய்யாக்கும் விதமாகவும், பயமுறுத்தும் விதமாகவும் படு வீழ்ச்சி கண்டுள்ளது ஜி.டி.பி.
இந்த நிலையிலேயே ஆர்.பி.ஐ முன்னதாக நான்காவது முறையாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதியன்று 0.35 புள்ளிகள் குறைத்து, 5.4 சதவிகிதமாக மாற்றப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் உதவும் என்று கணித்திருந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பேரிடியாக வந்து இறங்கியுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தம், சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தம், இதனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு படு வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இதனால் அதிகளவிலான அன்னிய முதலீடுகளும் வெளியேறி வருகின்றன.
இந்த நிலையில் இனியும் இந்த நிலை நீடிக்காதவாறு இருக்க, ஆர்.பி.ஐ கட்டாயம் அடுத்து வரும் கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அதிகளவிலான அன்னிய முதலீடுகள், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாகவும் பல அறிக்கைகளை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.