டெல்லி: கடந்த ஆறு மாதங்களாகவே வங்கிகள் இணைப்பைப் பற்றி பொதுத் துறை வங்கி உயர் அதிகாரிகளும், நிதி அமைச்சக அதிகாரிகளும் பேசி பல யோசனைகளை முன் வைத்தார்கள்.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரை வங்கி உயர் அதிகாரிகள் ஆகட்டும், நிதி அமைச்சகத்தின் பல அதிகாரிகள் ஆகட்டும் யாருக்குமே எந்த வங்கி உடன் எந்த வங்கிகள் இணைக்கப்பட இருக்கிறது என்கிற விவரம் தெரியவில்லை.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் போகும் சில மணி நேரங்களுக்கு முன் தான் எந்த வங்கிகளை எந்த வங்கியுடன் இணைக்கப் போகிறார்கள் என தீர்மானமாக முடிவு செய்தார்களாம்.
டெக்னாலஜி
கடைசியில் இந்த வங்கிகள் உடன் மற்ற வங்கிகளை இணைக்கலாம் எனச் அரசு தீர்மானமாக முடிவு செய்ய அழுத்தமான காரணமாக இருந்தது வங்கிகள் பயன்படுத்தும் டெக்னாலஜி & மென் பொருள் தானாம். கனரா வங்கியும், அதன் உடன் இணைக்கப்பட இருக்கும் சிண்டிகேட் வங்கியும் ஆரக்கில் நிறுவனத்தின் Iflex என்கிற மென்பொருளைத் தான் பயன்படுத்துகிறார்கள். அதே போல இந்தியன் வங்கியும், அதன் உடன் இணைக்கப்பட இருக்கும் வங்கியான அலஹாபாத் வங்கியும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் BaNCS மென் பொருளைப் பயன்படுத்துகிறார்களாம்.
ஃபினாக்கிள்
ஐஃப்ளெக்ஸ் மற்றும் பேங்க்ஸ் மென் பொருட்களை பயன்படுத்தும் இரண்டு செட் வங்கிகளை அப்படியே இணைத்தது போல மீதமுள்ள ஆறு வங்கிகளும் (1. பஞ்சாப் நேஷனல் பேங்க், 2. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், 3. யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, 4. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, 5. ஆந்திரா பேங்க், 6. கார்ப்பரேஷன் பேங்க்) இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் Finacle மென்பொருளைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்த ஆறு வங்கிகளை இணைக்கும் போது அரசு தீர ஆலோசித்து இணைப்புத் திட்டத்தைச் சொல்லி இருக்கிறதாம்.
கணக்கிட்டுச் சேர்த்தது
ஆக ஃபினாக்கில் மென் பொருளைப் பயன்படுத்தும் வங்கிகள் என்கிற கணக்கில் நல்ல காசா விகிதம் கொண்ட யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா உடன் சுமாரான காசா விகிதம் கொண்ட ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸை இணைக்கத் திட்டம் போட்டு இருக்கிறார்கள். அதே போல பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் ஒரியண்டெல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டு வங்கிகளுக்குமே வட இந்தியாவில் பெரிய அளவில் கிளை வசதிகள் இருக்கின்றன. ஆனால் கிழக்கு இந்தியா மற்றும் வட கிழக்கு பகுதிகளில் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா தான் அதிகம் பரவிக் கிடக்கிறது. ஆகையால் இந்த 3 வங்கிகளை ஒன்றிணைக்க திட்டமாம்.
காரணம்
இணைப்புத் திட்டங்களில் மட்டும் மத்திய அரசு கவனமாக இல்லை. சில வங்கிகளை இணைக்காமல் விட்டார்கள் நியாபகம் இருக்கிறதா..? அதற்கும் ஒரு வலுவான காரணத்தைச் சொல்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் வரப் போகிறது அதனால் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவை சீண்டவில்லை. பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் எப்போதுமே தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஒரு சீக்கியர் தான். எனவே தேவை இல்லாமல் சீக்கியர்களை சீண்ட வேண்டாம் என பஞ்சாப் சிந்த் பேங்க் அப்படியே தனியாக விடப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.