டெல்லி: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தான் நேரடி வரிகள் வாரியத்தின் அடுத்த தலைவராக வரலாம் என வருமான வரித் துறை அதிகாரிகள் வட்டத்தில் பேச்சுகள் எழுந்து கொண்டிருந்தன.
ஆனால் இப்போது ஆச்சர்யப்படும் விதமாக, அகிலேஷ் ரஞ்சன் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போவதாக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இவர் நேரடி வரிகள் வாரியத்தில் பல முக்கிய பணிகளைச் செய்தவர். குறிப்பாக தனி நபர்கள் செலுத்தும் வருமான வரியை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து, வரிச் சுமையைக் குறைத்து, நடுத்தர மக்கள் கையில் பணம் புழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்தவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தலைமையில்
சமீபத்தில், இதே அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான நேரடி வரிக் குறியீடு பணிக் குழு (Direct Tax Code Task Force), இந்தியாவில் இருக்கும் தனி நபர்களுக்கு புதிய வரி முறையைக் கொண்டு வரச் சொல்லி அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட, கடந்த 58 வருட பழைய இந்திய வருமான வரிச் சட்டத்தையே புரட்டிப் போடும் அளவுக்கு சில மாற்றங்களைப் பரிந்துரைத்து இருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்திருக்கின்றன.
இன்றைய வரி வரம்பு
தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டாம். 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டுபவர்கள் 5% வரி செலுத்த வேண்டி இருக்கிறது. 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் வருமானம் ஈட்டுபவர்கள் 20% வரி செலுத்த வேண்டி இருக்கிறது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டி இருக்கிறது. அனைவரும் 4% செஸ் வரி வேறு கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கிறது.
மாற்றம்
ஆனால் நம் வருமான வரித் துறை அதிகாரி அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு ஐந்து வரி வரம்புகளைக் கொண்டு வர அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறார்களாம். இன்னும் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான நேரடி வரிக் குறியீடு பணிக் குழு (Direct Tax Code Task Force) அரசுக்கு சமர்பித்து இருக்கும் அறிக்கைகள் முறையாக பொது வெளியில் வரவில்லை. இருப்பினும் வருமான வரித் துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் படி பரிந்துரைத்து இருக்கும் வருமான வரி வரம்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம்.
பரிந்துரை
1 ரூபாய் முதல் - 2.5 லட்சம் ரூபாய் வரை = வரி கிடையாது
2.5 லட்சம் - 5.0 லட்சம் ரூபாய் வரை = 5 % வரி
5.0 லட்சம் - 10 லட்சம் ரூபாய் வரை = 10 % வரி
10 லட்சம் - 20 லட்சம் ரூபாய் வரை = 20 % வரி
20 லட்சம் - 200 லட்சம் ரூபாய் வரை = 30 % வரி
200 லட்சம் (2 கோடி) க்கு மேல் = 35 % வரி
மேலே சொல்லி இருக்கும் தகவல்கள் இன்னும் அரசாலோ அல்லது வருமான வரித் துறையினாலோ உறுதி செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ராஜினாமா
இப்படி மக்களைப் பற்றியும், இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியும் யோசித்து செயல்படும் அகிலேஷ் ரஞ்சன் போன்ற அதிகாரிகளே தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் செல்லத் தொடங்கினால் அரசு கொடுக்கும் அழுத்தத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே அரசு ஆர்பிஐ, சிபிஐ, தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை தன் இஷ்டத்துக்கு வளைப்பதாக சர்ச்சைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த பிரச்னைகளை எல்லாம் அரசு கொஞ்சம் காது கொடுத்து கேட்டு நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்.