டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு இன்று முதல் கொஞ்சம் கொஞ்சாமாய் நனவாக போகிறது என்றே கூறலாம். ஏனெனில் அவர் ஆட்சிக்கு முதல் முறையாக வந்த போதிலிருந்து, கறுப்பு பண முதலைகளை பிடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.
இந்த நிலையிலேயே சுவிஸ் வங்கியையும் நாடினார். பல வருடங்களாக பிடிக்கொடுக்காத சுவிஸ் வங்கி ஒப்பந்த அடிப்படையில் இன்று முதல், சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களது விவரங்களை கொடுக்க ஒப்புக் கொண்டது.
முன்னதாக மிக இரகசியமாக சில எழுத்துகளை மட்டுமே கொடுத்து வந்த சுவிஸ் வங்கி தற்போது, இந்திய வாடிக்கையாளர்களின் முழு தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் கலந்துறையாடல்
சுவிட்சர்லாந்து பிரதிநிதிகள், மத்திய வருவாய் துறை செயலாளர் ஏ.பி.பாண்டே, நேரடி வரிகள் வாரிய தலைவர் பி.சி. மோடி, உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் ஆகியோருடன் கடந்த ஆக்ஸ்ட் 29 மற்றும் ஆக்ஸ்ட் 30ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சில குறிப்பிட்ட வழக்குகளில் கேட்கும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை துரிதமாக செயல்படுத்துவது குறித்து, இந்தியா சுவிஸ் உறுப்பினர்களை கேட்டுக் கொண்டது.
தற்போதைக்கு இது மட்டும் தான் கிடைக்கும்
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அளிக்கும் திட்டம் இன்று (செப்டம்பர் 1, 2019) முதல் தொடங்கவுள்ளது. குறிப்பாக 2018-ம் ஆண்டில் உள்ள கணக்கு விவரங்கள் இந்தியாவுக்கு கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018-ல் வங்கி கணக்கு முடிக்கப்பட்டு இருந்தாலும், அந்த தகவலும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இது கருப்பு பணம் குறித்தான அரசின் தீவிர நடவடிக்கைகளில், கறுப்பு பண முதலைகளுக்கு எதிரான அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் கூறப்படுகிறது.
இனி விவரம் தெரியும்
சுவிஸ் வங்கியில் இதுவரை யார் யார் கணக்கு வைத்திருந்தார்கள், என்னென்ன பரிமாற்றம் செய்திருந்தார்கள். என்ற விவரங்கள் இதுவரை கிடைக்காத நிலையில், இனி அந்த விவரங்கள் அரசுக்கு கொடுக்கப்படும் போது, இதில் உள்ள மர்ம முடிச்சுகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்த கறுப்பு ஆடுகளை இணம் கண்டு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கறுப்பு பண பதுக்கல்களின் புகலிடம்
கறுப்புப் பணக்காரர்களின் புகலிடம் எனக் கருதப்படுகிற சுவிட்சர்லாந்து, சமீப ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வரி ஏய்ப்பாளர்களை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்தியா-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே, நிதி பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியிலேயே, கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.