சில தினங்களுக்கு முன்பு தான் சில பிரிவினர்கள், குறிப்பாக தனி நபர்கள் தங்கள் வருமான வரிப் படிவங்களை முறையாக நிரப்பி சமர்பிக்க வேண்டிய கடைசி தேதியாக இருந்தது. இந்த முறை கொஞ்சம் நல்ல எண்ணிக்கையில் வருமான வரிப் படிவத்தைச் செலுத்தி இருக்கிறார்கள் மக்கள். அதோடு இந்திய வருமான வரித் துறை கிட்ட தட்ட ஒரு உலக சாதனையே படைத்து இருக்கிறதாம்.
ஆகஸ்ட் 31, 2019 தான் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்பதால் அந்த ஒரே நாளில் இதுவரை இந்திய வருமான வரித் துறை காணாத அளவுக்கு 49,29,000 பேர் தங்கள் வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
இதை கொஞ்சம் ஐடி மொழியில் சொல்ல வேண்டுமானால், ஆகஸ்ட் 31, 2019 ஒரு நாளில் மட்டும், அதிகம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில், ஒரு நொடிக்கு 196 பேர் தங்கள் வருமான வரிப் படிவங்களை சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் 7,447 பேர் தங்கள் வருமான வரிப் படிவங்களைச் சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் 3.87 லட்சம் பேர் தங்கள் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
இதைத் தான் வருமான வரித் துறையினர்கள், உலக சாதனையாகச் சொல்லி பெருமை பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதோடு ஆகஸ்ட் 2019 மாதத்தின் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 1.5 கோடி பேர் தங்கள் வருமான வரிப் படிவத்தை சமர்பித்து இருக்கிறார்களாம்.
இதை எல்லாம் விட முக்கியமாக சுமார் 2,200 வைரஸ் தாக்குதல்களில் இருந்தும் வருமான வரி தாக்கல் செய்யும் வேலையை தடை படாமல் பாதுகாத்து இருக்கிறார்களாம். அதோடு மத்திய அரசுக்கும், நமக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்ன தெரியுமா..? முந்தைய ஆண்டை விட சுமார் 4 சதவிகிதம் பேர் கூடுதலாக இந்த ஆண்டில் தங்கள் வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்து இருக்கிறார்களாம்.
இதை எண்களில் பார்த்தால், 2019 - 20 அஸெஸ்மெண்ட் ஆண்டில் 5.65 கோடி பேர் தங்கள் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்து இருக்கிறார்கள். கடந்த 2018 - 19 அஸெஸ்மெண்ட் ஆண்டில் 5.42 கோடி பேர் தங்கள் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
வருமான வரித் துறையின் இந்த தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும், வைரஸ் தாக்குதல்களில் இருந்து வருமான வரி செலுத்தும் வலைதளத்தை பாதுகாத்ததற்கும், அவர்களுக்கு ஒரு பலமான வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்வோம். வருமான வரித் துறையினருக்கு நம் வாழ்த்துக்கள்.