நாளை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் Jio GigaFiber திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. Jio GigaFiber திட்டத்துடன் ஒரு டெலிஃபோன் சேவை, ஒரு கேமிங் செட் டாப் பாக்ஸ், ஒரு இலவச 4 கே டிவி மற்றும் ஜியோ இண்டர் நெட் அஃப் திங்க்ஸ் (IoT - Internet of Things) என்று சொல்லப்படும் சேவை வழங்கப்பட இருக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் 12, 2019 அன்று நம் முகேஷ் அம்பானி 42-வது ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அறிவித்த போதில் இருந்தே எதிர்பார்ப்புகள் பலமாக அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன.
இப்போது Jio GigaFiber திட்டத்தில் சேர்ந்து கொள்வதில் கூட சில இணைய திருடர்கள் உள்ளே புகுந்து வங்கிக் கணக்கு விவரங்களை எல்லாம் திருடி விடுவதாகச் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆக இந்த பிரச்னைகளில் எல்லாம் சிக்காமல் Jio GigaFiber திட்டத்தில் எப்படி இணையலாம்.
பதிவு
https://gigafiber.jio.com/registration
என்கிற வலைதளத்தில் முதலில் கூகுள் மேப்பில் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சரியாக உங்கள் விலாசத்தைக் கொடுங்கள் அதன் பின், வழக்கம் போல உங்கள் முழு பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகளைக் கொடுத்து ஓடிபியைப் பெறுங்கள். வரும் ஓடிபியை ஜியோ வலைதளத்தில் கொடுத்தால் போதும். மீண்டும் வீட்டு முகவரியை உறுதி செய்யச் சொல்கிறார்கள். இதை எல்லாம் செய்து முடித்தால், அவ்வளவு தான் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வந்த பின் நம்மை அலைத்து ஜியோ நிறுவனமே விவரங்களைச் சொல்வதாகச் சொல்கிறார்கள்.
சிரமம்
இந்த முகவரியை சரியாக கூகுள் மேப்பில் டேக் செய்து முடிப்பதற்குள் நமக்கு நான்கு வயது கூடி விடும் போலத் தான் இருக்கிறது. அவ்வளவு எளிதில் நம் வீட்டு விலாசத்தை, ஜியோ வலைதளத்தில் இருக்கும் கூகுள் மேப்சில் குறிப்பிட முடியவில்லை. எனவே பொறுமையாக நேரம் இருக்கும் போது இந்த விவரங்களை நிரப்பவும். மிகவும் பொறுமையாக தேடிப் பிடித்து நிரப்ப வேண்டி இருக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
நகரங்கள்
தற்போதைக்கு ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்பூர், ஹைதராபாத், சூரத், வதோதரா, நொய்டா, காசியாபாத், புவனேஸ்வர், வாரனாசி, அலஹாபாத், பெங்களூரு, ஆக்ரா, மீரட், விசாகப்பட்டினம், லக்னெள, ஜாம்செத்பூர், ஹரித்வார், கயா, பாட்னா, போர்ட் பிளேர், போன்ற பகுதிகளுக்கு மட்டுமே கிடைக்கப் போகிறதாம். படிப்படியாக இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சேவை வழங்கப்படுமாம்.
ஜாலி தான்
பிறகு என்ன ஜாலியாக சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஜியோ ஜிகா ஃபைபரின் இலவச கால்கள், ஜியோ சினிமா, ஜியோ வீடியோ கேம்ஸ், ஜியோவின் முதல் நாள் முதல் ஷோ சினிமா என எல்லாவற்றையும் பார்த்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது தானே..? சரி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் முழுமையாக தன் சேவையை முதலில் கொடுக்கத் தொடங்கட்டும். அதன் பிறகு இதைப் பற்றிப் பேசுவோம். இந்த புதிய திட்டத்திலும் முழு இந்தியாவை வளைத்துப் போட வாழ்த்துக்கள் அம்பானி சார்.