இன்று முகேஷ் அம்பானி தலையின் கீழ் இயங்கும், ரிலையன்ஸ் ஜியோவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதோடு ஜியோ ஜிகா ஃபைபர் பெயரைச் சொல்லி பல திருட்டுகளும் நடந்து கொண்டிருக்கிறது.
ஒட்டு மொத்த இந்திய பிராட்பேண்ட், டிடிஹெச், சினிமா மற்றும் பொழுது போக்கு உலகத்திலேயே பெரிய திருப்புமுனையாக அமையும் அளவுக்கு இந்த ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் பேசப்படுகிறது.
ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் இணைவது எப்படி, கட்டணங்கள் செலுத்த வேண்டுமா..? என்ன திட்டங்கள் என்று எல்லாம் மக்கள் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மறு பக்கம்..?
திருட்டு
ஆனால் இன்னொரு பக்கம் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி சரமாரியாக சாதாரண மக்களிடம் இருந்து பணத்தை கறந்து கொண்டு இருக்கிறார்கள் ஹேக்கர்கள் மற்றும் இணைய திருடர்கள். அதுவும் நம்மிடமே வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் பாஸ்வேர்ட் பின், நெட் பேங்கிங் எண், யூபிஐ ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பின் போன்றவைகளை வாங்கி நமக்கே அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் வருத்தமான விஷயம் என்ன என்றால், பலரும் தங்களுக்கே தெரியாமல் இந்த இணைய திருட்டுக்கு பலியாகி பல ஆயிரம் ரூபாயை இழந்து கொண்டு இருப்பது தான்.
பதிவு செய்க
முதலில் ஒரு பிரமாதமான நியூஸ் லெட்டர் போன்ற மின்னஞ்சல் நமக்கு வரும். அந்த மின்னஞ்சலிலேயே ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் இணைவதற்கு விருப்பமா..? அப்படி என்றால் பதிவு செய்து கொள்ளவும் எனச் சொல்லப்பட்டு இருக்கும். நாமும் ஆர்வத்தில் நம்முடைய பெயர், முகவரி போன்ற அடிப்படை விவரங்கள் அனைத்தையும் கொடுத்துவிடுவோம். எல்லாம் முடிந்தது. விரைவில் வீட்டில் ஜியோவின் இலவச எல் இ டி டிவி வரும் என எதிர்பார்ப்போம். ஆனால் அதற்குப் பிறகு தான் பிரச்னையே தொடங்கும்.
ஆக்டிவேஷன்
நம்முடைய அடிப்படை விவரங்களை எல்லாம் கொடுத்த பின் நம்முடைய மின்னஞ்சலுக்கே "Activation Request Received" என்கிற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் வருமாம். இந்த மின்னஞ்சலை க்ளிக் செய்தால் அது வேறு ஒரு வலைதளத்துக்குச் செல்லும். அந்த தளத்தில் தான் நம்முடைய வங்கிக் கணக்கு எண் முதல் நம் பாஸ்வேர்ட்கள் வரை அனைத்து பணப் பரிமாற்றம் தொடர்பான விவரங்களும் கேட்கப்படும்.
அசல் போலவே இருக்கும்
இந்த வலைதளம் அப்படியே ஜியோ ஜிகா ஃபைபரின் அச்சு அசல் போலவே இருக்கும். எனவே பெரும்பாலான சாமானியர்கள் ஏமாந்து வங்கி விவரங்களைக் கொடுத்து விடுகிறார்கள். எனவே மக்கள் முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்... எப்போதுமே ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வங்கி கணக்கு சார்ந்த விவரங்களைக் கேட்காது. எனவே இனியாவது ஏமாறாமல் ஜியோ சேவைகளை பெறவும். சமீபத்தில் இப்படி ஜியோ ரீசார்ஜ்-க்கும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ் எம் எஸ்
"399 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வேண்டுமா..? அதுவும் மூன்று மாத காலங்களுக்கு வேலிடிட்டி உண்டு. உடனடியாக ரீசார்ஜ் செய்யுங்கள்" என்று ஏதாவது மெசேஜ் வருகிறதா..? இது போன்ற குறுஞ்செய்திகள் மின்னஞ்சல்கள் மற்றும் யூ ட்யூப் வீடியோக்களுக்கு பலியாகி விட வேண்டாம் என எச்சரிக்கிறது பல செய்திகள். ஏன்..? இந்த மெஸேஜ் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதில் அளித்தால் என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா..?
விவரங்கள்
வழக்கம் போல நீங்கள் இந்த மெசேஜ் மற்றும் மின்னஞ்சல்கள் அல்லது யூடியுப் வீடியோக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்குகளுக்குச் சென்றால் நம்முடைய தரவுகளை ஒவ்வொன்றாக கேட்கும். குறிப்பாக நம்முடைய பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்றவைகளை எல்லாம் கேட்கும். அதற்குப் பின் வழக்கம் போல இந்த செய்தியை 10 வாட்ஸ்அப் குழுக்களுக்கு பகிரச் சொல்லி நமக்கு உத்தரவு போடும் நாமும் அதை நம்பி நம்முடைய நண்பர்கள் குழு மற்றும் அலுவலக குழுவிற்கு இந்த செய்தியை பரப்புவோம்
பிரச்னைகள்
இதனால் நமக்கு இரண்டு விதத்தில் பிரச்சனைகள் ஏற்படும் ஒன்று நம்முடைய சொந்த தகவல்களை நாமே முன்வந்து ஒரு நிறுவனத்திற்கு கொடுப்பது போல் ஆகிவிடும். இந்த தரவுகளை டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விற்று விடுவார்கள். இந்த டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் தான் நம்மை தொடர்ந்து கிரெடிட் கார்டு வாங்கச் சொல்வது தனிநபர் கடன் வாங்க சொல்வது அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளை வாங்க சொல்வது, பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் சொல்வது என நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்வார்கள்.
வங்கிக் கணக்கு
இரண்டாவதாக இந்த தரவுகளை வைத்து அவர்களால் நம்முடைய வங்கிக் கணக்குகளை கூட ஹேக் செய்து நம் வங்கிக் கணக்கு பணத்தை திருட முடியும். வங்கிக் கணக்கு எனச் சொல்வதில் நம்முடைய கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் போன்றவைகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜியோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலை தளங்களில் தேடிய போது அப்படி எந்த ஒரு ஆதாரங்களும் கண்ணில் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரி பாருங்கள்
எனவே இனி இது போன்ற செய்திகளை மின்னஞ்சலில் அல்லது யூட்யூப் வீடியோக்கள் உங்களுக்கு வந்தால் அதைத் தவிர்த்து விட்டு அடுத்த வேலையை பார்க்கச் செல்வது சாலச் சிறந்தது. அதையும் மீறி உங்களுக்கு அந்த செய்தி உண்மை போல் தோன்றினால் ஜியோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலை தளத்திற்கு சென்று ஒன்றுக்கு இரண்டு முறை விவரங்களை தெரிந்து கொள்வது நல்லது.
ஜியோ ஸ்டோர்
ஆன்லைனில் ஜியோ ரீசார்ஜ் தொடர்பாகவோ அல்லது ஜியோ ஜிகா ஃபைபர் தொடர்பாகவோ சரி பார்த்து விவரங்களைப் பெற முடியவில்லையா..? சிரமம் பார்க்காமல் தயவு செய்து உங்கள் அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோருக்குச் சென்று விவரங்களைக் கேட்டுப் பெறுங்கள். ஒரு அவசரத்தில், ஆன்லைன் திருடர்கள் கேட்கும் அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட்டு, அவர்கள் வலையில் விழுந்து வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எல்லாம் யாரோ முகம் தெரியாத திருடனுக்கு தாரை வார்த்து விடாதீர்கள். உஷார் மக்களே உஷார்.
மீண்டும் சொல்கிறோம், ஜியோ நிறுவனமோ வேறு எந்த ஒரு நிறுவனமோ சம்பந்தமே இல்லாமல் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்கிறார்கள் என்றாலே உஷாராக நேரில் சென்று விசாரித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து வங்கி விவரங்களைக் கொடுத்து ஏமாற வேண்டாம்.