ஆட்டோமொபைல் துறையை பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை கூறியுள்ள நிலையில், டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் செய்தி நிறுவனங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஆட்டோமொபைல் துறைக்கு அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது.
மேலும் மத்திய அரசு வங்கிகளுக்கு மூலதனத்தை அதிகரித்துள்ளது. இது நல்ல விஷயம் தான். ஆனால் இது வங்கிகளுக்கு கிடைத்து, கடன் வழங்குதல் மற்றும் வாங்குதல் என வர வேண்டும் என்றும், ஆனால் இது செயல்பாட்டிற்கு வர இன்னும் 3 - 4 மாதங்கள் ஆகும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது துவண்டு போயுள்ள நிலையில், இத்துறையை ஊக்குவிக்க அரசு, நிதி விரிவாக்கத்தில் சிலவற்றை உடனடியாக செய்ய வேண்டும் என்றும், எனக்கு தெரியும், அரசுக்கு இதை விரிவாக்கம் செய்ய சிலவற்றை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அரசு இது போன்ற நெருக்கடியில் உடனடி நோய்தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும். இது தவிர உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து ஜி.எஸ்.டி விகிதங்கள் பற்றி பேசியவர், இரண்டு சக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் தற்போது, 28 சதவிகிதமாக உள்ளது. இது ஒரு விலை உயர்ந்த சொகுசு காருக்கு போட வேண்டிய வரி விகிதம் என்றும், இதனால் இந்த வரி விகிதத்தில் அரசு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆக இந்த ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் செய்யப்பட்டால், விற்பனை விகிதத்தில் உடனடி மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இத்துறையை பற்றி பேசுகையில், ஜனவரி மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை அதிகரிக்க தொடங்கலாம் எனவும், இதுவே எங்களது நம்பிக்கை என்றும், அதே சமயம் அரசு ஜி.எஸ்.டி விகிதத்திலும் மாற்றம் கொண்டு வரும் என்றும், உள்கட்டமைப்பு துறையை அரசு ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறோம் எனவும் வேணு கூறியுள்ளார்.
தனது வாழ்க்கையில், இத்துறையிலான 30 வருட பயணத்தில் இதுவரை இப்படி ஒரு மோசமான வீழ்ச்சியை கண்டதில்லை என்றும், இதை உடனடியாக சீரமைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்துறையில் ஏற்பட்டு வரும் சரிவானது தற்போது அனைத்து துறையிலும் பரவ தொடங்கியுள்ளது என்றும், இதை உடனடியாக அரசு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.