கொல்கத்தா: இந்தியாவின் நிலக்கரி மற்றும் சுரங்க தொழில்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை சமீபத்தில் 100 சதவிகிதமாக அதிகரித்தது மத்திய அரசு. இந்த முதலீட்டு வரம்பு ஏற்றத்தை பெருவாரியான தொழிலாளர் நலச் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்த வரிசையில் கோல் இந்தியா நிறுவனத்தின் நான்கு மத்திய தொழிலாளர்கள் வர்த்தக யூனியனும் இந்த அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த எதிர்ப்பின் அடையாளமாக, வரும் செப்டம்பர் 24, 2019, செவ்வாய் கிழமை அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போகிறார்களாம். இந்தியாவில் சுரங்கம் மற்றும் நிலக்கரி போன்ற துறைகளில் தனியாருக்கு அதிகம் இடம் கொடுப்பது நாட்டுக்கு நல்லது இல்லை என்கிறது இந்த வர்த்தக யூனியன்கள்.
INTUC, AITUC, HMS, CITU போன்ற நான்கு மத்திய தொழிலாளர் வர்த்தக யூனியன்கள் இந்த அடையாள வேலை நிறுத்தத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிஎம்எஸ் அமைப்பு மட்டும் பங்கேற்கப் போவதில்லையாம்.
இந்த நோட்டீஸில் நான்கு கோரிக்கைகளை அரசிடம் விளக்கி இருக்கிறார்களாம். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றப் படவில்லை என்றால் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள் தொழிலாளர் வர்த்தக யூனியன் தரப்பினர்கள்.
கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ECL, BCCL, CCL, CMPDL, SECL, MCL போன்றவைகளை தாய் நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் உடன் இணைக்கச் சொல்லிக் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை வங்கிகளை எல்லாம் ஒன்றிணைத்துக் கொண்டு இருக்கும் நம் மத்திய அரசு, கோல் இந்தியா விஷயத்தில் மட்டும் அனைத்து துணை நிறுவனங்களையும் தனித் தனி நிறுவனங்களாக மாற்ற துடித்துக் கொண்டு இருக்கிறதாம்.
இந்த விஷயத்தை கண்டித்து தான் அனைத்து துணை நிறுவனத்தையும் இணைக்கச் சொல்லிக் கேட்டு இருக்கிறார்கள் தொழிலாளர் வர்த்தக யூனியன் அமைப்பினர்கள்.