மும்பை: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் யார் எனக் கேட்டால் முகேஷ் அம்பானி என பிறந்த குழந்தை கூடச் சொல்லும். அதே போல இந்தியாவின் பொருளாதார நிலை பற்றிக் கேட்டாலும் மிக மோசமாக இருக்கிறது எனச் சொல்லும்.
அந்த அளவுக்கு பொருளாதார மந்த நிலை இந்திய நாட்டையே பிடித்து உலுக்கிக் கொண்டு இருக்கிறது. எந்த பக்கம் பார்த்தாலும் நட்டம், வேலை இழப்பு, சொத்து மதிப்பு சரிவு என கதறுகிறார்கள்.
இப்போது இந்த பட்டியலில் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி கூட இடம் பிடித்து இருக்கிறார் என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சியால், பயங்கர வருத்தத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி.
கடந்த ஒரு வருடத்தில்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை கடந்த 25 அக்டோபர் 2018 அன்று 1,016 என்கிற 52 வார இறக்க விலையைத் தொட்டது. அதன் பின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செய்கைகள், ஆண்டுப் பொதுக் கூட்டம், முகேஷ் அம்பானியின் சில அதிரடி முடிவுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் விலை ஏற்றம் காணத் தொடங்கியது. இந்த முறை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் சுமார் 40 சதவிகிதம் வரை எகிறியது.
40 % வளர்ச்சியா..?
ஆம் 40 சதவிகிதம் வளர்ச்சி கண்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். அதுவும் அடுத்த ஏழே மாதங்களில் இந்த அசுர வளர்ச்சி கண்டு இருக்கிறது. 03 மே 2019 அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை தன் வாழ் நாள் உச்சமான 1,416 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமாராக 8.9 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது.
நட்டம்
ஆனால் இப்போது அதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7.7 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. ஆக 1.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தன் சந்தை மதிப்பை இழந்து இருக்கிறது. சமீபத்தில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை சவுதி அராம்கோ நிறுவனத்துக்கு விற்று தன் கடன்களை அடைக்க இருப்பதாகச் செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அம்பானி குடும்பம்
எனவே, இப்படி பங்குகளை வெளி நிறுவனங்களுக்கு விற்கும் நேரத்தில், தன் நிறுவனத்தின் பங்கு விலையில் ஒரு பெரிய சரிவு ஏற்படுவதை யார் தான் விரும்புவார்கள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியை ஒரு தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் முகேஷ் அம்பானி வருத்தப்படுகிறார் என்று மட்டும் பார்க்க வேண்டாம். ஒரு வியாபார ரீதியிலான காரணம் இருப்பது போல சில சொந்த காரணங்களும் இருக்கிறதாம்.
சொந்த காரணங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானியின் தாயார் கோகிலா பென் பெயரில் 1.46 கோடி பங்குகள், முகேஷ் அம்பானியின் பெயரில் 72 லட்சம் பங்குகள் இருக்கிறதாம். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி 67.9 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறார். அதே போல முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் மகன் ஆகாஷ் அம்பானி தலா 67 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறார்கள். மற்றொரு மகனான ஆனந்த் அம்பானி பெயரில் 2 லட்சம் பங்குகள் இருக்கிறதாம்.
எனவே வருத்தம் கொஞ்சம் பலமாக இருக்கிறதாம். இந்திய நாட்டின் மிகப் பெரிய பணக்காரருக்கே 1.2 லட்சம் கோடி சொத்து மதிப்பு சரிவு என்றால் சாமானியனின் கதி..?