மோசமான இந்திய பொருளாதாரம் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை இந்திய ரூபாய் மதிப்பைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ஆசிய சந்தையிலேயே மிகவும் மோசமான நாணயமாக இந்திய ரூபாய்த் திகழ்கிறது.
உலகிலேயே 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவிற்கு இப்படியொரு நிலையா..? என்பது தான் தற்போது எல்லோருடைய கேள்வியாக உள்ளது.
74 ரூபாய்
இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போது இல்லாத வகையில் அடுத்தச் சில மாதங்களுக்குள் 74 ரூபாயை தொடும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அன்னிய முதலீடு
இந்திய சந்தையிலிருந்து தொடர்ந்து அன்னிய முதலீடு வெளியேறி வருவதாலும், இந்தியாவில் முக்கியத் துறைகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாலும், நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எவ்விதமான சாத்தியக்கூறும் இல்லாத நிலையிலும் இந்தியா சிக்கித் தவிக்கிறது.
தனியார் நிறுவனங்கள்
அன்னிய முதலீடு குறைந்து வருவதைப் போல் இந்தியாவில் தற்போது குறைந்து வரும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியைப் பார்த்து தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை விருப்பம் இல்லாமல் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு தானாகவே சரியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
74 ரூபாய்
இந்நிலையில் அடுத்தச் சில மாதங்களுக்குள் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் சரிந்து மார்ச் 2020க்குள் 73 முதல் 74 ரூபாய் வரையில் சரியும். ஆனால் ரிசர்வ் வங்கி முக்கியமான முயற்சிகளை எடுத்து அன்னிய முதலீட்டைக் கவர்ந்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71-72 ரூபாய் வரை தாக்குப்பிடிக்கும் எனப் பொருளாதார வல்லுனர்கள் கணக்கிட்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா - சீனா
இதேபோல் சர்வதேச சந்தை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றால் அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும். இரு நாடுகளும் தொடர்ந்து வரிக்கு மேல் வரி விதித்து வருகிறது.
வர்த்தகப் போர்
இது அமெரிக்கா - சீனாவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சந்தையும் பாதித்து வருகிறது. இந்த வர்த்தகப் போர் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க இரு நாடுகளும் அக்டோபர் மாதம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.