மும்பை ; புதிய மோட்டார் வாகன சட்டங்கள் பலரை கடுப்பேற்றி இருக்கலாம், ஏன் அபராதத்தையும் கட்டிவிட்டு நொந்திருக்கலாம், ஆனால் இன்னொரு புறம் படுத்துக் கிடந்த இன்சூரன்ஸ் துறை, எழுந்து நின்று நடமாட துவங்கியுள்ளது.
இன்சூரன்ஸ் விற்பனை அமேகமாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் சோகத்தில் இருந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தற்போது இதை கொண்டாட தொடங்கியுள்ளனவாம்.
இதுமட்டும் அல்ல அரசின் இந்த புதிய விதிமுறைகளுக்கு நன்றி என்றும் கூறியுள்ளனவாம்.
செப்டம்பர் 1 முதல் நடைமுறை
கடந்த செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டங்களின் படி, பல புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி முன்பு இருந்ததை விட அபராதம் பல மடங்காக கூடியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் ஒரு புறம் கடுப்பில் இருந்தாலும், மழுங்கி போய் இருந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இது நல்ல காலாமாக அமைந்துள்ளது.
எதற்கு இந்த கொண்டாட்டம்?
ஒரு புறம் புதிய விதிகளால் பல மடங்கு அபராதங்களை கட்டி வரும் வாகன ஓட்டிகள், மறுபுறம் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை ஓட்டினால் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் என்ற காரணத்தால், தங்களது வாகனங்களுக்கு இல்லாத ஆவணங்களை புதுபித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இன்சூரன்ஸ் விற்பனை களைகட்டியுள்ளதாம். குறிப்பாக நான்கு சக்கர வாகன இன்சூரன்ஸ், இரண்டு சக்கர வாகன இன்சூரன்ஸ் என புதிதாக போடுபவர்களும், இன்சூரன்ஸ் முடிந்து புதுப்பிப்பவர்களும் அதிகரித்துள்ளனராம்.
இன்சூரன்ஸ் இல்லை என்றால் எவ்வளவு அபராதம்?
சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் என்பது கட்டாயம் என்ற நிலையில், முதன் முறை இன்சூரன்ஸ் இல்லாமல் சென்றால் 2000 ரூபாயும், மீண்டும் இரண்டாவது மூறை அதே தவறை செய்தால், 4000 ரூபாய் வரை அபாராதமும், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்ப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அபராதத்திற்கு பயந்து கொண்டே தங்களது இன்சூரன்ஸ்களை புதுப்பிப்பதாலும், இன்சூரன்களை புதியதாய் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.
இரு சக்கர காப்பீடு அதிகரிப்பு
அதிலும் இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்தே, இரு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுபித்தல், இன்சூரன்ஸ் புதிதாக எடுத்தல் என, முன்பிருந்தை விட சுமார் 300 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாம். இது குறித்து பாலிசி பஜார்.காமின் மோட்டார் வாகன காப்பீட்டுத் தலைவர் கூறுகையில், இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் எங்களது விற்பனை, 5 நாளில் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும், அதோடு தற்போது நாங்கள் ஒரு நாளைக்கு 67,000 இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிபித்தல் 50% அதிகரிப்பு
குறிப்பாக பாலிசி காலம் முடிவடைந்தும், புதுபிக்காத பாலிசிகள் 50 சதவிகிதம் புதுபிக்கப்படுகின்றன. இது முன்பை விட தற்போது நன்றாகவே அதிகரித்துள்ளன என்றும், ஏனெனில் இவைகள் முன்பை விட அபராதம் அதிகம் என்பதால், அதை கட்ட வேண்டாம் என்றும் எதிர்பார்க்கின்றனர். இதனால் காலாவதியான தங்களது பாலிசிகளை தொடர்ந்து புதிபித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் பாலிசிகள் அதிகரிக்கும்
இது குறித்து எஸ்.பி.ஐ பொது காப்பீட்டின் தலைவர், சுப்பரமணியம் பிரம்மஜோசுலா கூறுகையில், மோட்டார் வாகன சட்டம் கடுமையாக்கப்பட்ட்டுள்ள நிலையில், காலாவதியான பாலிசிகள் அதிகளவில் புதுபிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இது இன்னும் அதிகரிக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போது சில மாநிலங்களில் மட்டும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முழுமையாக அமல்படுத்தும் போது, இது இன்னும் அதிகரிக்கும் என்றும், இது தவிர ஓட்டுனர்களிடம் இது ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அதோடு இந்த புதிய விதிகளால் விபத்துகளூம் குறையக் கூடும் என்றும் கூறப்படுகிறது.