டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய மாநிலங்கள் தான் முக்கிய முகவர்களாக செயல்பட வேண்டும் என்று, நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
தொழில் துறை அமைப்பான PHDCCI ஏற்பாடு செய்திருந்த, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமிதாப், இந்தியாவைப் மிகச் சிறந்த பொருளாதார நாடாக மாற்றுவதற்கு, மாநிலங்கள் அனைத்தும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அமிதாப், பிரதமர் நரேந்திர மோடி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிலும் அடுத்து வரும் 2024ம் ஆண்டுக்கான பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்றும், இதே 2030ல் 10 டிரில்லியன் டாலர் என்றும் இலக்கு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதை அடைய பல தடைகள் இருந்தாலும், மத்திய அரசுடன் மாநிலங்களும் இணைந்தால், அந்த இலக்கை கண்டிப்பாக நம்மால் அடைய முடியும் என்றும், இதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியை இருமடங்காகவும், மும்மடங்காகவும் நோக்கமாகக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இதற்கு பரந்த அளவிலான துறைகளில் பெரிய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக விவசாயம், லேபர் துறைகளை குறிப்பிட்டு காண்பித்த அவர், தற்போதைய இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2.7 டிரில்லியன் டாலர் என்றும், நமது இலக்கு அடுத்த சில வருடங்களில் 5 டிரில்லியன் டாலர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மிக மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரம், இதனால் நலிவடைந்து வரும் பல துறைகள், குறிப்பாக ஆட்டோமொபைல் துறை, ஸ்டீல் துறை என தெரிந்தும் தெரியாமலும் பல துறைகள், நாளுக்கு நாள் நலிந்து கொண்டிருக்கு நிலையில் அவற்றை சீர் செய்தாலே, ஓரளவு நமது பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.
அதிலும் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் இருக்கும் நிலையில் பல நிறுவனங்கள் ஜி.எஸ்.டி பயந்தே மூடப்பட்டு விட்டன. ஆக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.