பெங்களுரு ; பொருளாதார பின்னடைவு, வேலையிழப்பு, வேலையின்மை என தலைவிரித்தாடும் பல பிரச்சனைகளினால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவிக்கும் சூழலில், தற்போது இது உணவு துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது இந்த பணி நீக்கம்.
இந்த நிலையிலேயே பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ கடந்த சனிக்கிழமையன்று 541 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
இது முன்னதாக கடந்த மாத இறுதியிலும் 60 பேரை வீட்டுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இது இந்த நிறுவனத்தில் தொடரும் ஒரு தொடர்கதை போல் ஆகி விட்டது என்றும் கருதப்படுகிறது.
தொடர் கதையாகும் பணி நீக்கம்
இந்த நிறுவனத்தில் பணீ நீக்கம் ஒன்றும் புதிதில்லை என்றாலும், கடந்த மாதத்தில் வெறும் 60 பேரை பணீ நீக்கம் செய்துள்ளது. ஆனால் தற்போது 541 பேரை பணீ நீக்கம் செய்துள்ளது. ஆக மொத்தத்தில் இந்த ஆண்டில் இதுவரை 601 பேரை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான இது, முன்னதாக கடந்த 2015ல் இதே போல் 300 பேரை வீட்டிற்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
சோமேட்டோவின் தங்க திட்டத்தினால் பிரச்சனை
சோமேட்டோ நிறுவனத்தின் கோல்டு திட்டத்தினால் உணவக உரிமையாளர்கள் மற்றும் தேசிய உணவக சங்கத்திற்கும், சோமேட்டோ நிறுவனத்திற்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பல நூறு உணவகங்கள் சோமேட்டோ உள்ளிட்ட சில ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்தன. இதனால் உணவு டெலிவரியை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டிருந்த சோமேட்டோவுக்கு இது பெருத்த அடியாகவே கருதப்படுகிறது.
என்ன தான் பிரச்சனை
சோமேட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் வழங்குவதாகவும், இதனால் உணவகங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாகவும் உணவகங்கள் கூறி வந்தன. அதிலும் உணவகங்கள், நீங்கள் அதிகளவில் தள்ளுபடியோ, சலுகையோ கொடுப்பதால் நாங்கள் பழைய உணவை கொடுக்க முடியாது, இன்றைய நிலையில் விலைவாசிகள் ஏறிவிட்டன. அதோடு, வாடகை கட்டணங்களும் அதிகரித்து விட்டன. இந்த நிலையில் இந்த விலைக்கு நாங்கள் உணவை கொடுத்தால், எப்படி கட்டுபடியாகும் என்றும் வாதிட்டன. எனினும் சோமேட்டோ இச்சலுகைகளை குறைப்பதாக கூறினாலும், சோமேட்டோ வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டது உண்மை.
தொழில் நுட்ப வளர்ச்சியால் ஆட்கள் அதிகம் தேவையில்லை
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியினால், மனித செயல்பாடுகள் குறைந்து வருகின்றன. அந்த வகையில் முன்னதாக 15 சதவிகிதம் ஆர்டர்களுக்கு கஸ்டம் சப்போர்ட் தேவைப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 7 சதவிகித ஆர்டர்களுக்கு மட்டுமே எங்களது உதவி தேவைப்படுகிறது. இதனால் தான் இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், வளர்ந்து வரும் நிலையில் உள்ள இந்த நிறுவனத்தை மேம்படுத்த இந்த நிறுவனம், பல்வேறு யுக்திகளை கையாண்டும் வருகிறது என்றும் இந்த நிறுவனத்தின் தலைவர் திபீந்தர் கோயல் கூறியுள்ளார்.