டெல்லி : நாட்டின் பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருந்து வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் முன்னதாக பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனமாக 70,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்குவதாக கூறியிருந்தது.
இந்த நிலையில் துவண்டு போன நிலையில் உள்ள இன்சூரன்ஸ் துறையை ஊக்குவிக்க, 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 12,000 கோடி ரூபாயை மறுமூலதனமாக கொடுக்க உள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களான நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இன்சூரன்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்குமே இந்த மறுமூலதனம் என்றும் கூறப்பகிறது.
காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனங்களுக்கு, இந்த நிதியானது மூலதன இருப்பை அதிகரிக்கவும், சில விதிமுறைகளை நிறைவு செய்யவும், மத்திய அரசு 12,000 கோடியை அளிக்க மத்திய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு பின் இந்த மூன்று பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இணைக்கப்படும் என்றும், இதன் மூலம் இந்த நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக திகழும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிதியின் மூலம் இந்த நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டினை இன்னும் அதிகப்படியாக ஊக்குவிக்க முடியும் என்றும், இதன் மூலம் நாட்டின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமாக திகழ முடியும் என்றும் கருதப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக 70,000 கோடி ரூபாயை மறுமூலதனமாக வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் 55,250 கோடி ரூபாய் பல பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனமாக வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 1.05 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் நிலையில் மத்திய அரசானது பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், முன்னதாக பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் மூலம் இனி வெறும் 12 பொதுத்துறை வங்கிகள் தான் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்சூரன்ஸ் துறையிலும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கும் போது, இன்னும் நன்றாக செயல்பட முடியும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.