மும்பை : தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் ஆட்டோமொபைல் துறைக்கு ஏதேனும் விமோசனம் கிடைத்திடதா என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் இத்துறைக்கு அடுத்தடுத்து, பல பீதியை கிளப்பும் செய்திகளே வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் ஏற்கனவே படுவீழ்ச்சி கண்டுள்ள இத்துறை தொடர்ந்து வெற்றிகரமாக 10-வது மாதமும் படுவீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் படுவீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வளர்ச்சி என்றும் கூறப்படுகிறது.
வழக்கம் போல் விற்பனை சரிவு
வழக்கம் போல ஒட்டுமொத்த துறையும் வீழ்ச்சி கண்டிருந்தாலும், குறிப்பாக கார் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதிலும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது டெலிவரிகள் 41 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 1,15,957 யூனிட்களாக குறைந்துள்ளது என்றும் சியாம் அறிவித்துள்ளது. இதுவே டிரக் மற்றும் பேருந்துகள் 39 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இதே இரு சக்கர வாகனங்கள் விற்பனையும் குறைந்துள்ளதாகவும், குறிப்பாக கிராமப்புறங்களில் 22 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும், 1.5 மில்லியன் யூனிட்களாக குறைந்துள்ளன.
ஒட்டுமொத்த துறையும் பாதிப்பு
ஆசியாவிலேயே மூன்றாவது மிகப்பெரிய துறையாக விளங்கும் ஆட்டோமொபைல் துறையில், கிட்டதட்ட மில்லியன் கணக்கான மக்கள் இத்துறையில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதத்திலும் தொடர்ந்து தனது பங்கை அளித்து வரும் இத்துறையின் சரிவு, இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்றும் மெக்கின்ஸி அன்ட் கோ தெரிவித்துள்ளது.
விற்பனை சரிவுக்கு காரணம் இது தான்?
ஆட்டோமொபைல் துறையில் நிகழ்ந்து வரும் இந்த தொடர்ச்சியான வீழ்ச்சிக்கு, குறைவான தேவையே காரணம் என்றும், இது கிராமப்புறங்களில் விவசாயிகளின் வருவாய் குறைந்ததாலேயே, வாகனங்கள் விற்பனையில் பெரும் சரிவை கண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அதிகளவிலான வாகனங்கள் விற்பனை கிராமப்புறங்களிலும், மேலும் கிராமப்புற பொருளாதாரத்தை நம்பியுள்ள நகர்புற விற்பனையுமே பெரிய அளவில் சரிந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
உற்பத்தியை குறைத்த நிறுவனங்கள்
இந்த நிலையில் ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களே விற்பனையாகாத நிலையில், மீண்டும் உற்பத்தி செய்தால் அது பெரும் தேக்க நிலையை தான் உருவாக்கும் என்று பல நிறுவனங்கள தங்களது உற்பத்தியை குறைத்துள்ளன. குறிப்பாக மாருதி சுசூகி, மகேந்திரா அன்ட் மகேந்திரா உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்துள்ளன. ஏன் சில நிறுவனங்கள், உற்பத்தியை குறைக்க கட்டாய விடுமுறையும் அளித்துள்ளது.
ஊழியர்கள் பணி நீக்கம்
இந்த நிலையில் உற்பத்தியை குறைத்துள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையிலான அரசு, வாகன விற்பனையை அதிகரிக்க பல சலுகைகளை அதிகரித்துள்ள நிலையில், வரும் பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தற்போது 28 சதவிகிதமாக உள்ள ஜி,எஸ்.டி வரியை, விற்பனையை அதிகரிக்க 18 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பதும் இத்துறையினரின் வேண்டுகோளாக உள்ளது.


Click it and Unblock the Notifications