புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த செப்டம்பர் 01, 2019 முதல் அமலுக்கு வந்து விட்டது. சின்ன சின்ன தவறுகளுக்குக் கூட மொத்த சொத்தையும் எழுதி வைக்கும் அளவுக்கு இந்தியாவின் அனைத்து தரப்பினரையும் அலற வைக்கிறது அபராதங்கள்.
சாலை விதி மீறல்களுக்கு விதித்த அபராதத்தை செலுத்த விருப்பம் இல்லாமல் டெல்லியில் ஒருவர் தன் இருசக்கர வாகனத்தையே எரித்துவிட்டார்.
தன் மூத்த காவல் துறை அதிகாரிக்கே 10,000 அபராதம் விதித்த சாலை போக்குவரத்து அதிகாரிகள்... என கன்னாபின்னா என செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் இது புது விஷயமாக இருக்கிறது.
நாகாலாந்து
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் பி எல் ஏ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ட்ரக்கைத் தான் அசோக் ஜாதவ் என்கிற ஓட்டுநர் ஓட்டிக் கொண்டு சத்திஸ்கர் மாநிலத்தின் அங்குல் மாவட்டத்தைச் சேர்ந்த தால்சேர் பகுதிக்குச் செல்லும் வழியில் ஒடிஸா மாநிலத்தின் சம்பல்பூர் பகுதியில் கடந்த செப்டம்பர் 03, 2019 அன்று சாலை போக்குவரத்து காவலர்கள் மற்றும் சம்பல்பூர் பிராந்திய போக்குவரத்து அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார்.
மொத்தம் 86,500
ட்ரக்கில் ஒரு பெரிய ஜே சி பி வாகனம் ஏற்றப்பட்டு இருந்தது. பிடிபட்ட ஓட்டுநர் அசோக் ஜாதவ்விடம் இருந்து அதிகாரிகள் பல்வேறு விவரங்களைக் கேட்டு விசாரித்து விட்டு சாலை போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் புதிய மோட்டார் வாகனச் சட்ட விதி மீறல்களை ஒவ்வொன்றாக கணக்கிடத் தொடங்கி இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக கணக்கிட்டுப் பார்த்தால் 86,500 ரூபாய் அபராதம் செலுத்தச் சொல்லி இருக்கிறார்கள் அதிகாரிகள். அதற்கான செலானையும் கையில் கொடுத்து இருக்கிறார்கள்.
எப்படி
NL01 G1470 என்கிற பதிவு எண் கொண்ட வாகனத்தை அசோக் ஜாதவ் ஓட்டினார்.
அதிகாரபூர்வமாக அனுமதி பெறாத ஓட்டுநர் ஓட்டியதற்கு - ரூ. 5,000.
ஓட்டுநரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாததால் - ரூ. 5,000.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் 18 டன் கூடுதல் எடையுடன் வாகனத்தை ஓட்டியதற்கு - ரூ. 56,000
குறிப்பிட்ட வடிவம் இல்லாமல் மாறுபட்ட வடிவத்தில் பெரிய சுமைகளை எடுத்துக் கொண்டு செல்வதால் (carrying over dimension projections) - ரூ. 20,000
பொது சாலை விதி மீறல்கள் - ரூ. 500... என மொத்தம் 86,500 ரூபாயை தீட்டி இருக்கிறார்கள்.
அபராதம் கொடு
கடந்த செப்டம்பர் 03, 2019 அன்று பிடிபட்ட அசோக் ஜாதவையும், அவரின் வாகனத்தையும் கடந்த செப்டம்பர் 06, 2019 அன்று அபராதம் செலுத்திய பிறகு தான் ஓட்ட அனுமதித்து இருக்கிறார்கள். சாலை போக்குவரத்து காவலர்கள் மற்றும் சம்பல்பூர் பிராந்திய போக்குவரத்து அதிகாரிகள் போட்ட மொத்த 86,500 ரூபாய் அபராதத்தில் 70,000 ரூபாயை செலுத்தி இருக்கிறார்களாம். அதன் பிறகு தான் வாகனத்தை விடுவித்து இருக்கிறார்களாம்.
கதறல்
அநேகமாக இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிக அளவுக்கு அபராதம் செலுத்திய நபர் நம் அசோக் ஜாதவ்வாகத் தான் இருப்பார் போல. அதோடு இவருடைய பி எல் ஏ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி இவருக்கு விதித்த அபராதத்தை கண்டு கண்ணீர் விட்டு கதறி இருக்கும். பின்ன... ஒரே தவறுக்கு 500, 1000 என்று அபராதம் என்றால் பரவாயில்லை. ஆனால் 86,500 ரூபாய் என்றால், அந்த ட்ரிப்பில் கிடைக்கும் மொத்த வருவாய் கூட அவ்வளவு இருக்காது தானே. பின் கதறாமல் என்ன செய்வார்கள்.