இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் புட் டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ பல்வேறு போராட்டங்களுக்குப் பின் தற்போது முதல் முறையாக லாபத்தை அடையப்போகிறது. இது நாள் வரையில் வர்த்தக விரிவாக்கம், மேம்பாடு என மொத்த வருமானத்தையும் செலவு செய்த காரணத்தினால் லாபத்தை அடையவில்லை.
இதுமட்டும் அல்லாமல் அடுத்த 5 வருடத்தில் 10 மடங்கு வளர்ச்சி அடைய மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது சோமேட்டோ.

சில வாரங்கள் முன்பு ஆன்லைன் புட் டெலிவரி தளமான சோமேட்டோவில் அதிகக் கட்டணத்திற்காகப் பல முன்னணி ஹோட்டல் நிறுவனங்கள் இத்தளத்திலிருந்து வெளியேறியது, இதனால் பல்வேறு மாற்றங்களைச் செய்து வெளியில் சென்ற ஹோட்டல்களைத் திரும்பவும் இணைக்கச் சோமேட்டோ போராடி வருகிறது. இது ஒருபக்கம் இருக்கப் பல முக்கியக் காரணத்திற்காகக் குருகிராம் பகுதி வர்த்தகத்தில் இருந்து சுமார் 540 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.
இப்படித் தொடர்ந்து பிரச்சனைகளை மட்டுமே சந்தித்து வரும் சோமேட்டோ முதல் முறையாக லாபத்தை அடைய உள்ளது.
2008ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட சோமேட்டோ தற்போது 24 நாடுகளில் 10000 நகரங்களில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 500 நகரங்களில் வர்த்தகம் செய்யும் இந்நிறுவனத்தின் மதிப்பு 3.6 பில்வியன் முதல் 4.5 பில்லியன் டாலர் வரையில் மதிப்பிடப்படுகிறது.
மேலும் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் சூப்பர்ஸ்டார் ஆகவும் சோமேட்டோ விளங்குகிறது. இந்நிறுவனத்தின் சிகோயா கேப்பிடல், டெமாசெக் ஹோல்டிங்க்ஸ், இன்போ எட்ஜ் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் சோமேட்டோ நிறுவனத்தின் தலைவர் தீபேன்ந்தர் கோயல் பேசுகையில், எங்களுடைய நஷ்டத்தின் அளவிடு கடந்த 3 மாதத்தில் 50 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. வர்த்தகம் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 6 மடங்கு உயர்ந்து வரலாறு காணாத வகையில் இந்தியாவில் மட்டும் 500 நகரங்களில் வர்த்தகம் செய்து வருகிறோம்.
சோமேட்டோ எப்போதும் வேண்டுமானாலும், எந்த மாதம் வேண்டுமானாலும் லாபத்தை எடுக்கத் தயார். ஆனால் தற்போது நாங்கள் வர்த்தக விரிவாக்கத்தையும், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தான் அதிகளவில் கவனத்தைச் செலுத்துகிறோம்.
இதன் படி ஒவ்வொரு வாரமும் 2.5 கோடி வாடிக்கையாளருக்குச் சேவை அளிப்பது மட்டும் அல்லாமல் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை அளித்து வருகிறோம்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் எங்களுடைய தற்போதைய இலக்கு அடுத்த 5 வருடத்தில் 10 மடங்கு வளர்ச்சி அடைவதே ஆகும் என அறிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் டெலிவரி பார்ட்னர்களின் வருமானம் முதல் முறையாக 200 கோடி ரூபாய் தாண்டியுள்ளது எனத் தீபேந்தர் கோயல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சோமேட்டோ இலக்கை அடைய தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாழ்த்துக்கள்..!


Click it and Unblock the Notifications