சென்னை: இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரதிய ஜனதா கட்சியின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் சென்னையில் தொடங்கி இருக்கிறது.
சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து இந்தியாவின் ஒரு பாகமாகவே கொண்டு வந்து இருக்கிறோம். அதோடு சட்டப் பிரிவு 35A-வையும் ரத்து செய்து இருக்கிறோம். இனி இந்தியாவில் கொண்டு வரும் அனைத்து சட்டங்களும், வசதிகளும் இந்தியாவின் வட கோடி பகுதியான காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால்தான் ரத்து செய்து இருக்கிறோம்.
உதாரணமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் இட ஒதுக்கீடு போன்ற அனைத்து வசதிகளும் இனி காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்கும். எனவே இனி ஜம்மு காஷ்மீர் பகுதியில் நல்ல பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்கிறார் நிர்மலா சீதாராமன்.
அதோடு இந்தியாவின் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வங்கிகள் இணைப்பு போன்ற வசதிகளைக் கொண்டு வந்து இருக்கிறோம். வங்கிகள் இணைப்பின் வழியாக அதிகம் கடன் கொடுக்க பணம் வைத்திருக்கும் வங்கிகளையும், சிறப்பாக கடன் கொடுக்கத் தயாராக இருக்கும் வங்கிகளையும் இணைத்து இருக்கிறோம்.
Ease of Doing Business என்று சொல்லப்படும் இண்டெக்ஸில் 142-வது இடத்தில் இருந்த இந்தியாவை இப்போது 77-வது இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அடுத்த சில வருடங்களில் 1.95 வீடுகள் கட்ட இருக்கிறோம். ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கொண்டு வந்து இருக்கிறோம்.
இப்படியாக பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்களை ஒவ்வொன்றாக வரிசை கட்டிச் சொல்லி இருக்கிறார். நல்ல வேளையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிதாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.