சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் 100 நாள் சாதனைகளை விளக்கிக் கொண்டு இருக்கிறார். அதில் ஆட்டோமொபைல் துறை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.
ஆட்டோமொபைல் துறை பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. தொடர்ச்சியாக வேலை இல்லா நாட்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் துறையைச் சரி செய்ய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது என்கிற கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.
பேச்சு வார்த்தை
இந்திய ஆட்டோமொபைல் துறையில் வியாபாரம் பார்க்கும் பல தரப்பினரையும் ஒன்றாக அலைத்துப் பேசிக் கொண்டு இருக்கிறோம். இப்போது இந்திய ஆட்டோமொபைல் துறை கண்டு வரும் பல சிக்கல்களுக்கு பல வித காரணங்கள் இருக்கின்றது என ஆட்டோமொபைல் துறை சார்ந்தவர்களே வாய் திறந்து சொல்லி இருக்கிறார்கள். அந்த நிலையை சரி செய்வதற்குத் தான் அவர்களிடம் பேசி வருகிறோம்.
முதல் மாற்றம்
அவர்களோடு தொடர்ந்து பேசி வருவதால் தான் கடந்த ஆகஸ்ட் 23, 2019 அன்றே ஆட்டோமொபைல் துறைக்கு சில விஷயங்களை தெளிவு படுத்தினோம். குறிப்பாக மின்சார வாகனங்களுக்கு இணையாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களும் பார்க்கப்படும் எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறோம். மின்சார வாகனங்கள் மட்டும் இல்லாமல் பெட்ரோல் & டீசல் வாகனங்களுக்கும் 30% தேய்மானம் கொடுக்கப்படும் என ஒரு சலுகை போலவே சொல்லி இருந்தோம்.
தெளிவு
அதோடு மார்ச் 31, 2020 வரை பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களை வாங்கினாலும் வழக்கம் போல வாகனங்களை பயன்படுத்தலாம். இந்த 30 சதவிகித தேய்மானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறோம். அதோடு மார்ச் 2020-க்குள் வாங்கும் வாகனங்கள் அனைத்தும் அதன் பதிவு காலம் வரை முழுமையாக பயனபடுத்தலாம் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
கவுன்சில் முடிவு
அதே போல ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்கச் சொல்லி இந்திய ஆட்டோமொபைல் துறை ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறது. அதை நீங்களும் அறிவீர்கள். ஆனால் இப்போதைக்கு ஜிஎஸ்டி வரிகளைக் குறைக்க முடியுமா, முடியாதா என நான் தனிப்பட்ட முறையில் சொல்ல முடியாது. அது ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரங்களுக்கு உட்பட்டது எனச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பேச்சு வார்த்தை
மேலும் தொடர்ந்து இந்திய ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த தொடர்ந்து அவர்களோடு பேசிக் கொண்டு இருக்கிரோம். அடுத்த அடுத்த காலங்களில் இந்திய ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்தும் விதத்தில் அரசிடம் இருந்து நடவடிக்கைகலை எதிர்பார்க்கலாம் எனச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நல்ல வேளையாக புதிய அபராத திட்டங்கள், பழைய வாகனங்களுக்குத் தடை, புதிய வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு என எதையும் சொல்லவில்லை.