டெல்லி: பொதுவாக ஒரு நாட்டின் தலைவர் அல்லது அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் போதோ அல்லது வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் போதோ கலாச்சாரம் மற்றும் நல்லுறவின் அடிப்படையில் எல்லா நாட்டுத் தலைவர்களும் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அப்படி நம் இந்தியாவின் பிரதமர் சென்று வந்த வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மற்றும் பெரிய தலைவர்கள் சந்திப்பில் ஆயிரக் கணக்கான பரிசுப் பொருட்கள் வாங்கி இருக்கிறார்.
அந்த பரிசுப் பொருட்களை எல்லாம் வரும் செப்டம்பர் 14, 2019 தொடங்கி இணைய தளம் வழியாக ஏலம் விடப் போகிறார்களாம். இந்தியப் பிரதமரின் பரிசுப் பொருட்களை ஏலத்தில் எடுக்க ஆரம்ப விலையாக 250 ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்களாம். ஒவ்வொரு பொருளின் மதிப்பு மற்றும் விலையை பொறுத்து ஒவ்வொரு பரிசுப் பொருட்களுக்கும் ஒரு தனிப்பட்ட ஏல விலையை நிர்ணயித்து இருக்கிறார்களாம்.
அதிகபட்சமாக ஒரு பரிசுப் பொருளின் ஆரம்ப விலையாக 2.5 லட்சம் ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்களாம். இதே போல கடந்த ஜனவரி 2019-ல் ஒரு முறை இந்தியப் பிரதமரின் பரிசுப் பொருட்கள், சுமார் 14 நாட்கள் வரை ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல பிரதமர் மோடி, தன் பரிசுப் பொருட்கள் ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை நமாமி கங்கா திட்டத்துக்கு நன்கொடையாக கொடுத்து விடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நமாமி கங்கா திட்டம் ஒரு மத்திய அரசுத் திட்டம். இந்த திட்டத்தின் வழியாக கங்கையை தூய்மைப் படுத்துவது தான் மத்திய அரசின் நோக்கம்.
2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின் அதிகம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் என்கிற அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டதை நாம் அறிவோம். பிரதமர் நரேந்திர மோடி மேற் கொண்ட வெளிநாட்டு பயணங்களின் பட்டியலை விக்கீபீடியா பக்கம் தனியாக வெளியிட்டு இருக்கிறது என்றால், எந்த அளவுக்கு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களைப் பற்றி இணையத்தில் தேடி இருப்பார்கள் எனப் புரிகிறது.