இந்திய வங்கிகள் ஏற்கனவே கடுமையான வர்த்தகம் மற்றும் வராக்கடன் பிரச்சனையில் சிக்கித்தவித்துக் கொண்டு இருக்கிறது. இதில் யெஸ் வங்கி பல தரப்பட்ட பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு கடந்த 2 வருடமாகத் தவித்து வருவது நாம் எல்லோருக்கும் தெரியும். இதன் காரணமாக யெஸ் வங்கியின் மூலதனம் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் யெஸ் வங்கி தலைவரின் பங்குகளை விஜய் சேகர் சர்மா வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யெஸ் வங்கி
கடந்த 2 வருட காலத்தில் யெஸ் வங்கியின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் மீதான மதிப்பை இழந்து பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் யெஸ் வங்கி QIP திட்டத்தின் மூலம் சுமார் 1930 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்து தனது மூலதனத்தை அதிகரித்தது.
ரானா கபூர்
இந்நிலையில் யெஸ் வங்கியின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ரானா கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கும் யெஸ் வங்கி பங்குகளைப் பேடிஎம் நிறுவன தலைவர் விஜய் சேகர் சர்மா வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலின் மூலம் யெஸ் வங்கியின் பங்கு மதிப்புக் கணிசமாக உயர வாய்ப்புகள் உள்ளது.
விஜய் சேகர் சர்மா
நாட்டின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் பின்டெக் நிறுனமான பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா பேடிஎம்-இன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட சேவையை அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து போராடி வருகிறது.
இதுநாள் வரையில் பேடிஎம் சேவைகள் அனைத்தும் ஏதேனும் ஒரு வங்கி இணைப்புடன் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது யெஸ் வங்கி பங்குகளை வாங்கி வங்கி நிர்வாகத்துடன் பேடிஎம்-க்கு உதவும் வகையில் விஜய் சேகர் சர்மா இணைய உள்ளார்.
2000 கோடி ரூபாய்
ரானா கபூர் மற்றும் அவரது குடும்பத்திடம் சுமார் 9.64 சதவீத யெஸ் வங்கி பங்குகள் உள்ளது. இதனை முழுவதுமாக விஜய் சேகர் சர்மா 2000 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க உள்ளார்.
தற்போதைய சந்தை மதிப்பின் படி இந்த 9.64 சதவீத யெஸ் வங்கி பங்குகளின் மதிப்பு 1,550 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் விஜய் 2000 கோடி ரூபாய்க்கு வாங்குவது பல கேள்விகளை உருவாக்கியுள்ளது.
பேச்சுவார்த்தை
இன்னும் இந்த டீல் உறுதி செய்யப்படவில்லை, அனைத்தும் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே இருக்கிறது. ஆனால் யெஸ் வங்கி தற்போது இருக்கும் நிலையில் இந்த 2000 கோடி ரூபாய் முதலீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதனால் இந்த டீல் நிச்சயம் ஒப்புதல் பெறும் என அனைத்து தரப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
ஒரு நிறுவன முதலீட்டாளர்கள் வங்கியில் 5 சதவீத பங்குகள் வரையில் அனுமதி பெறாமல் முதலீடு செய்யலாம். அதற்கு மேற்பட்ட அளவுகளில் பங்கு முதலீடு செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும்.