உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போர்டு மோட்டார்ஸ், இந்தியாவில் இருக்கும் தனது குஜராத் மாநிலத்தில் இருக்கும் தொழிற்சாலையை மந்தமான வர்த்தகத்தின் காரணமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒருபக்கம் உற்பத்தியைக் குறைத்து வரும் நிலையில், போர்டு மோட்டார்ஸ் ஒரு தொழிற்சாலையே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, குஜராத்
போர்டு மோட்டார்ஸ் இந்தியாவில் சென்னையிலும், குஜராத்திலும் கார் மற்றும் இன்ஜின் தயாரிப்புக்காகத் தொழிற்சாலையை வைத்துள்ளது. அதில் குஜராத் தொழிற்சாலையை விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
1 பில்லியன் டாலர்
இந்நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு தான் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் மாபெரும் தொழிற்சாலையைக் குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் தொழிற்சாலையை அமைத்தது. சில முக்கிய நிர்வாக முடிவுகளால் தொழிற்சாலையை விற்பனை செய்யும் முடிவை போர்டு எடுத்துள்ளது.
உற்பத்தி திறன்
இந்தத் தொழிற்சாலையில் வருடத்திற்கு 2,40,000 கார்களையும், 2,70,000 இன்ஜின்களையும் தயாரிக்க முடியும் அளவிற்குப் போர்டு நிறுவனம் இத்தொழிற்சாலையை வடிவமைத்துள்ளது. மார்ச் 2015ஆம் ஆண்டில் இருந்து தான் இத்தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கப்பட்டு உள்ளது. வெறும் 4 வருட காலத்திலேயே தொழிற்சாலை விற்பனை செய்யப்படும் நிலையில் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சோகத்தில் உள்ளனர்.
சனந் தொழிற்சாலை
சனந் தொழிற்சாலையில் போர்டு நிறுவனம் செடான் மாடல் ஆன Aspire மற்றும் ஹேட்ச்பேக் மாடலான பிகோ கார்களும் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் கார்கள் அனைத்தும் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தப்பட்டது. சென்னை தொழிற்சாலையை உள்நாட்டு சந்தைக்குப் பயன்படுத்தி வந்தது போர்டு.
ஜெனரல் மோட்டார்ஸ்
போர்டு நிறுவனத்தின் அமெரிக்கப் போட்டி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் போதுமான வர்த்தகத்தைப் பெற முடியாத காரணத்தினால் 2017இல் குஜராத் ஹாலோல் பகுதியில் இருந்த தொழிற்சாலையைச் சீன SAIC குழுமத்திற்கு விற்பனை செய்து விட்டு மொத்த இந்திய வர்த்தகத்தையும் மூடியது. இதேபோன்ற செயலை தான் போர்டு நிறுவனம் செய்து வருகிறது.
ஆனால் இதைப் போர்டு நிறுவனம் மறுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.