இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் சக போட்டி நிறுவனங்களுடன் போட்டி போடவும், தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் புதிய வர்த்தகப் பிரிவில் ஒரு நிறுவனத்தை முழுமையாக வாங்கியுள்ளது.
செமிகன்டக்டர் டிசைன் பிரிவில் சிறந்து விளங்கும் ஒரு முன்னணி நிறுவனத்தை 180 கோடி ரூபாய்க்கு மொத்தமாக வாங்கியுள்ள ஹெச்சிஎல்.
ஹெச்சிஎல்
நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக மிகவும் குறைவான வர்த்தக வளர்ச்சியை மட்டுமே சந்தித்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது புதிய வர்த்தகத் துறையில் போதிய ஊழியர்களும், அனுபவமும் இல்லாமல் இருப்பது தான்.
இதனால் புதிய வர்த்தகம் கிடைக்காமல் ஹெச்சிஎல் தவிக்கிறது.
ஷிவ் நாடார்
இப்பிரச்சனையை உணர்ந்துகொண்ட ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ஷிவ் நாடார் புதிய தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த வர்த்தகத்தில் கவனத்தையும் செலுத்த துவங்கினார். இந்தப் பணியில் செமிகன்டக்டர் டிசைன் பிரிவில் சிறந்து விளங்கும் சங்கல்ப் செமிகன்டக்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது.
சங்கல்ப் செமிகன்டக்டர்
சங்கல்ப் செமிகன்டக்டர் நிறுவனம் செமிகன்டக்டர் டிசைன், அனலாக், டிஜிட்டல், மிக்ஸ்டு சிக்னல் சிப் டிசைன் போன்றவற்றில் சிறந்து விலங்குகிறது. மேலும் இந்நிறுவனம் அட்டோமோடிவ், நுகர்வோர், IOT, மருத்துவ உபகரணம், நெட்வொர்கிங் மற்றும் வையர்லெஸ் துறையில் பல தரப்பட்ட end-to-end சேவைகளை அளித்து வருகிறது.
இந்த நிறுவனத்தை ஹெச்சிஎல் நிறுவனம் சுமார் 180 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
வர்த்தக மேம்பாடு
ஏற்கனவே ஹெச்சிஎல் செமிகன்டக்டர் டிசைன் துறையில் இருந்தாலும் சங்கல்ப் செமிகன்டக்டர் நிறுவனத்தின் கைப்பற்றல் மூலம் இத்துறை வர்த்தகத்தில் ஹெச்சிஎல் மிகப்பெரிய அளவில் வலிமை அடையும். அதுமட்டும் அல்லாமல் பல தரப்பட்ட புதிய வர்த்தகத்தையும் பெற இப்புதிய நிறுவனம் ஹெச்சிஎல்-க்கு உதவும்.
இதோடு புதிய துறையில் வர்த்தகத்தைப் பெறவும் சங்கல்ப் செமிகன்டக்டர், ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.