தலைப்பைப் படித்த உடன் கொஞ்சம் மிரட்சியாக இருக்கிறதா..? இவ்வளவு மோசமான நிதி நிலைக்கு மத்தியில் தான் பிரதமர் Pradhan Mantri Kisan Mandhan Yojana-வை தொடங்கி வைக்கப் போகிறார்.
அடுத்த சில மாதங்களில் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்ட சபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்போது பாஜக தான் ஜார்கண்டில் ஆட்சியில் இருக்கிறது. இந்த சட்டசபைத் தேர்தல் வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு Pradhan Mantri Kisan Mandhan Yojana திட்டத்தை, இன்று ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் வைத்து தொடங்க இருக்கிறார் நரேந்திர மோடி.
விவசாயிகளுக்கான இந்த ஓய்வு ஊதியத் திட்டங்கள் உடன், வியாபாரிகள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கான ஓய்வு ஊதியத் திட்டங்களையும் மோடி தொடங்கப் போகிறாராம்.
என்ன சிறப்பு
இந்த Pradhan Mantri Kisan Mandhan Yojana திட்டத்தின் மூலம் சுமார் 5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 60 வயதுக்குப் பின் மாதம் 3,000 ரூபாய் ஓய்வு ஊதியம் வழங்கப்படுமாம். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் வழியாக சுமார் 10,750 கோடி செலவாகும் எனக் கணித்து இருக்கிறார்கள். இந்த Pradhan Mantri Kisan Mandhan Yojana திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இணைந்து பயன் பெறலாமாம்.
மற்ற திட்டங்கள்
இந்த Pradhan Mantri Kisan Mandhan Yojana திட்டம் விவசாயிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் என ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ரகுபர் தாஸ் புகழ்ந்து இருக்கிறார். இந்த திட்டத்துடன் வியாபாரிகள் ஓய்வு ஊதியத் திட்டமான Pradhan Mantri Laghu Vyaparik Mandhan Yojana மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கான ஓய்வு ஊதியத் திட்டமான Swarojgar Pension Scheme போன்றவைகளை ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் வைத்தே தொடங்க இருக்கிறார் மோடி.
மற்ற வேலைகள்
அதோடு 69 ஏக்லவ்யா மாதிரி பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டுவது, ஜார்கண்ட் மாநில புதிய சட்டசபையைத் திறந்து வைப்பது, மல்டி மாடல் வெசல் டெர்மினல் நீர் வழிப் போக்குவரத்தைத் தொடங்கி வைப்பது என பல திட்டங்களை இன்று கட்டவிழ்த்து விடப் போகிறாராம். நம் பிரதமர் கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் சரி தான். நல்ல திட்டங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இப்படி நல்ல திட்டங்களைச் செய்யவும் அரசுக்குப் பணம் தேவைப்படும் தானே..? அந்த பணத்தை எப்படி வசூலிக்கப் போகிறார்கள்.
என்ன செய்வீர்கள்
வரியாக வசூலிக்கப் போகிறார்களா..? கார்ப்பரேட் கம்பெனிகளுக்கோ நுகர்வு இல்லை. நுகர்வு இல்லாததால் உற்பத்தியைக் குறைத்து பலரையும் வேலையை விட்டு நீக்கி, வீட்டுக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள் கம்பெனிகள். ஜிஎஸ்டி வரியை முறையாக வசூலிக்க முடியவில்லை. வசூலித்தாலும் வியாபாரிகளுக்கு நிறைய ரீஃபண்ட் கொடுக்க வேண்டி இருக்கிறது. இப்படி அரசுக்கும் சரி, தனியார் கம்பெனிகளுக்கும் சரி போதிய வருவாய் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு மத்தியில் நிறைய நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து பணம் இல்லாமல், திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போய்விட்டால் என்ன செய்வீர்கள்..?
அரசின் நிலை
2019 - 20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் போது ஒரு விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்ல மறந்துவிட்டார் அல்லது மறைத்துவிட்டார். அரசின் மொத்த வருவாய் 20.82 லட்சம் கோடி ரூபாய். இதோடு கடன் வாங்க இருக்கும் தொகை 7.03 லட்சம் கோடி ரூபாய். நாம் ஏற்கனவே வாங்கி இருக்கும் கடனுக்கு 2019 - 20-ல் செலுத்த வேண்டிய வட்டி மட்டும் எவ்வளவு தெரியுமா..? 6.60 லட்சம் கோடி ரூபாய். ஆக 7.03 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, 6.60 லட்சம் கோடி ரூபாயை கடனுக்கான வட்டி மட்டும் செலுத்தப் போகிறோம். இது தான் நம் நிதி நிலை
சூப்பர் திட்டம்
விவசாயிகளுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டம், உலகத்துக்கு ஒரு முன் மாதிரித் திட்டமாக அமைய வேண்டும் என்றால், அது நீண்ட நாட்களுக்கு, சரியான விவசாயிகளுக்கு கொடுக்கப் பட வேண்டும். ஆனால் தற்போது இந்தியாவின் நிதி நிலையும் சரி இல்லை, பொருளாதார நிலையும் சரி இல்லை. எனவே அரசு கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலையில் ஈடுபட வேண்டும். அப்போது தான் திட்டத்தை நீண்ட நாட்களுக்கு செயல்படுத்த முடியும்.