இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் பிரச்னைகளை சரி செய்ய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஐந்து வழிகளைச் சொல்லி இருக்கிறார்.
தற்போது இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வரும் சிக்கல்களுக்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியை தவறாக நடைமுறைப்படுத்தியது தான் காரணம் எனவும் சொல்லி இருக்கிறார் மன்மோகன் சிங்.
ஐந்து அறிவுரைகளுக்கு முன், "நம் நாடு பொருளாதார சரிவில் இருக்கிறது என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள். அதன் பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்துவதைப் பற்றி யோசிக்கலாம்" என காட்டமாகப் பேசி இருக்கிறார் முன்னாள் பிரதமர் மற்றும் பொருளாதார அறிஞர் மன்மோகன் சிங்.
காது கொடுத்து கேளுங்கள்
தற்போது பொறுப்பில் இருக்கும் மத்திய அரசு முதலில் காது கொடுத்து பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். திறந்த மனதுடன் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசும் நிபுணர்கள் சொல்வதை கேட்க வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி அரசு ஒரு குறைந்தபட்ச தெளிவான இலக்கோடு பயணிப்பதாக எனக்குத் தெரியவில்லை எனவும் சொல்லி இருக்கிறார் மன்மோகன் சிங்.
நேரம் வீண்
ஏற்கனவே மோடி அரசு தினமும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பதற்காக, நிறைய நேரத்தை வீண் அடித்துவிட்டது. இப்போது வெறும் ஒரு துறை சார்ந்த அறிவிப்புகள் செய்வதை விட, அந்த துறையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார் முன்னாள் பிரதமர் மற்றும் பொருளாதார அறிஞர் மன்மோகன் சிங்.
ஜிஎஸ்டி
முதலாவதாக, ஜிஎஸ்டி வரியை, சரி செய்ய வேண்டும். இந்த வரியை சரி செய்யும் காலத்தில் அரசுக்கு கொஞ்சம் வரி இழப்பு ஏற்படலாம்.
இரண்டாவதாக, விவசாயம் மற்றும் கிராம புற நுகர்வை புதிய வழிமுறைகளைக் கையாண்டு ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் மக்களிடம் நுகர்வு அதிகரிக்கும். புதிய வழிமுறைகளை காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் சொல்லி இருப்பதையும் போகிற போக்கில் சொல்லி இருக்கிறார். இந்த வழிமுறைகளால் விவசாய சந்தை தளர்வாக்கப்படும், மக்கள் கையில் பணம் சென்று சேரும்.
பணம் தேவை
மூன்றாவதாக, இந்தியாவில் கடன் கொடுக்க பணம் தேவையாக இருக்கிறது. இந்த லிக்விடிட்டி சிக்களை சரி செய்ய கொஞ்சம் பணத்தை புழக்கத்தில் விட வேண்டும்.
நான்காவதாக, அதிக தொழிலாளர்கள் தேவையாக இருக்கும் ஜவுளி, ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், மலிவு விலை ஹவுசிங் போன்ற துறைகளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். அதற்கு எளிதில் கடன் கிடைக்க வேண்டும். குறிப்பாக சிரு குறு தொழில் முனைவோருக்கு எளிதில் கடன் கிடைக்க வேண்டும்.
வாய்ப்பு
ஐந்தாவதாக, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரால் ஏற்படும் ஏற்றுமதி வெற்றிடத்தை இந்தியா நிரப்ப வேண்டும். புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை கண்டறிந்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் அடுத்த 3 - 4 ஆண்டுகளில் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி காணும் எனச் சொல்லி இருக்கிறார் மன்மோகன் சிங்.