கவுகாத்தி : இந்திய ஆட்டோமொபைல் துறையானது கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு படு வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் கடந்த ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஓலா மற்றும் உபெரும் ஒரு காரணம் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பில் பல கருத்துகள் எதிராக கூறப்பட்டது. எனினும் தற்போது இத்துறையை சேர்ந்த, முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம், ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய இந்த படு வீழ்ச்சிக்கு ஓலா உபெர் காரணம் இல்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், இந்தியாவில் உரிமையாளர் (Ownership pattern) முறை இன்று வரை மாறவில்லை. மக்கள் இன்னும் அபிலாஸைகளுடன் தான் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
வாடகை காருக்கு மாறிய மக்கள்
கடந்த செவ்வாய் கிழமையன்று நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், மில்லியன் கணக்கான பயன்பாட்டாளர்கள் ஓலா மற்றும் உபெரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்கள் காரை தவணை முறையில் வாங்கி, அதற்கு மாத மாதம் இ.எம்.ஐ தொகை கட்டுவதற்கு பதிலாக, ஓலா உபெர் போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதுவும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு, பல காரணிகளில் ஒன்று என்றும் கூறியிருந்தார்.
ஓலா உபெர் வலுவான காரணம் இல்லை
ஆட்டோமொபைல் துறையின் இந்த வீழ்ச்சிக்கு ஓலா உபெர் வலுவான காரணமாக இருக்காது. ஏனெனில் இதில் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம், ஓலா உபெர் சேவை நாட்டில் கடந்த 6 - 7 வருடங்களாக உள்ளது. ஆனால் அந்த சமயங்களில் ஆட்டோமொபைல் துறையில் எந்த தொய்வும் இல்லை. அதிலும் கடந்த சில மாதங்களாக மிக மோசமான நிலைக்கு ஆட்டோமொபைல் துறை சென்று கொண்டிருக்கிறது. ஆக இந்த மோசமான நிலைக்கு ஓலாவும் உபெரும் காரணமாக இருக்க முடியாது என்றும் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். ஏனெனில் இதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்காவில் உபெர் மிகச்சிறந்த நிறுவனம், ஆனால் அமெரிக்காவில் கார் விற்பனை வீழ்ச்சியடையவில்லை, மாறாக விற்பனை வலுவடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
விற்பனை வீழ்ச்சி
இந்தியாவில் கார் வாங்குபவர்களில் 46 சதவிகிதம் பேர் முதல் பயனர்கள், அவர்களில் பலர் அலுவலகம் செல்ல வாடகை காரில் செல்லலாம், ஆனால் குடும்பத்துடன் வெளியே செல்ல, சொந்தக் காரைத் தான் விரும்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உள் நாட்டு வாகனங்களின் மொத்த விற்பனையானது 23.55 சதவிகிதம் சரிந்து 18,21,490 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும், இது முன்னதாக முந்தைய ஆண்டில் 23,82,436 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும்
இதே கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான விற்பனை 15.89 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 97,32,040 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டில் 1,15,70,401 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் எப்படி எனினும், வரும் பண்டிகை காலத்திலாவது விற்பனை அதிகரிக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.