சில தினங்களுக்கு முன்பு தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜகவின் 100 நாள் சாதனைகளை விளக்கும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது இந்திய ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இன்றைய கால இளைஞர்கள் ஓலா, உபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டர்களின் வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதும் இந்திய ஆட்டோமொபைல் சரிவுக்கு ஒரு காரனம் என பதில் கொடுத்தார் நிர்மலா சீதாராமன். அவ்வளவு தான், நெட்டிசன்களும் தங்களால் முடிந்த வரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ட்ரோல் செய்தார்கள்.
#SayItLikeNirmala #SayItLikeFM #SayItLikeNirmalaTai... என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ட்ரோல் செய்து தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள் ட்விட்டர் வாசிகள். இந்த ஹேஸ்டேக்குகள் மற்றும் நிதி அமைச்சர் டிரெண்ட் மெல்ல சமூக வலைதளங்கள் முழுக்கவும் பரவிக் கொண்டு இருக்கிறது.
"இந்திய உணவுகளான, அரிசி, கோதுமை உணவுகளான சாதம் சாம்பார், சப்பாத்தி, பருப்பு போன்றவைகளைச் சாப்பிடாமல் இன்றைய காலத்து இளைஞர்கள் பீட்ஸா பர்கர் போன்ற உணவுகளைச் சாப்பிடத் தொடங்கிவிட்டார்கள்" என ட்விட் செய்யத் தொடங்கி...
"இந்தியாவில் அகோரிகள் அதிகம் ஆகிவிட்டார்கள் அதனால் தான் உள்ளாடைகளின் விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்து இருக்கிறது" என்பது வரை பொருளாதார செய்திகளை தாறுமாறாக நினைவுபடுத்தி ட்விட் செய்துவிட்டார்கள்.
தற்போது நிர்மலா சீதாராமனின் ஓலா உபர் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி ஒரு பதிலடி கொடுத்து இருக்கிறார். "2019 பொதுத் தேர்தல் காலத்தில் வேலை இல்லா திண்டாட்டம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது ஓலா, உபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டர்கள் வழியாக பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது, எனச் சொன்னார்கள். ஆனால் இப்போது இந்திய ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி கண்டிருப்பதற்கு அதே ஓலா உபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டார் நிறுவனங்களையே காரணம் சொல்கிறார்கள்...?" என கேள்வி எழுப்பி இருக்கிறார். அதோடு பாஜக அரசு பொருளாதார விவகாரங்களில் ஏன் இவ்வளவு குழப்பமாக இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.