டெல்லி: இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனமான, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இனி தனியார் கைக்குப் போக இருக்கிறதாம்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஒரு கணிசமான பங்குகளை ஒரு சர்வதேச எண்ணெய் நிறுவனத்துக்கு விற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் எண்ணெய் சந்தையில், குறிப்பாக சில்லறை வணிகத்தில் போட்டிகளை அதிகரிக்கத் தான் இப்படி சர்வதேச நிறுவனங்களுக்கு வழி விடுவதாகச் சொல்கிறது அரசு தரப்பு.
53.3% பங்குகள்
தற்போது கிடைத்து இருக்கும் செய்திகள் படி சுமாராக பாரத் பெட்ரோலியம் கார்பப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 53.3 சதவிகித பங்குகளை ஒரு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனத்துக்கு விற்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 2019 - 20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் போதே, இந்த நிதி ஆண்டில் சுமார் 1.05 லட்சம் கோடி ரூபாய் வருவாயை மத்திய அரசின் சொத்துக்களை விற்று ஈட்ட இருப்பதாகச் சொன்னது குறிப்பிடத்தக்கது.
நிதிப் பற்றாக்குறை
இந்த 2019 - 20 நிதி ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி தன் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவிகிதமாகவே வைத்துக் கொள்ள முடிவு செய்தது. அந்த 3.3 சதவிகித நிதிப் பற்றாக்குறைக்குள்ளேயே வருடத்தை முடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. மிக முக்கியமாக எதிர்பார்த்த வருமானம் இல்லை, ஜிஎஸ்டி வரி வருவாயும் மந்தமாக இருக்கிறது. போதாக்குறைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் ஜிஎஸ்டி ரீஃபண்ட் எல்லாம் வேறு கொடுக்க வேண்டி இருக்கிறது.
வருவாய்
இப்படி வருவாய் வரும் வழிகள் எல்லாம் மந்தமாக இருப்பதால், தன் வருவாயை அதிகரிக்க மத்திய அரசு தன் நிறுவனங்களை விற்கத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே மத்திய ரயில்வேயில் இரண்டு ரயில்களை தனியார் இயக்க அனுமதி கொடுத்து இருப்பது நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆக மத்திய அரசு தன் வருவாயை ஈட்ட, தனியார் நிறுவனங்களைப் போல மக்களைப் பற்றிச் சிந்திக்காமல், தன் சொத்துக்களை எல்லாம் அள்ளி எரிந்து தன் நிதி நிலையை மேம்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பதை அப்பட்டமாகப் பார்க்க முடிகிறது.
சந்தை
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கார்பரேட் கொள்கைகளை வரவேற்கும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், இன்று பாரத் பெட்ரோலியம் பங்கின் விலையை சுமார் 7 சதவிகிதம் உயர்த்திவிட்டார்கள். அதற்கு இந்த தனியார்மய நடவடிக்கைகள் தான் காரணம். ஆக சந்தைக்கு அரசின் இந்த முடிவு பிடித்திருக்கிறது என்பதை விலை ஏற்றத்தில் காட்டி இருக்கிறார்கள். ஆனால் இன்று சென்செக்ஸ் வெறும் 0.7 சதவிகிதம் (280 புள்ளிகள்) தான் அதிகரித்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
பேச்சு வார்த்தை
இப்போது வரை இந்த செய்தி அதிகாரபூர்வமாக எந்த ஒரு அரசு அதிகாரிகள் அல்லது அமைச்சர்களிடம் இருந்து வர வில்லை. ஆனால் யாரும் இதுவரை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு தாரை வார்க்க பாராளுமன்றத்தில் அனுமதியும் தேவைப்படும் எனச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். இதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் எண்ணெய் வியாபாரம் செய்ய சவுதி அராம்கோ ரிலையன்ஸ் உடன் டீல் பேசியது நினைவுக்கு வருகிறது.
தடை
ஏற்கனவே கடந்த 2003-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை தனியாருக்கும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை மக்களுக்கும் விற்க அரசு முன் வந்த போது, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. அதோடு ஏகப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வலுவான எதிர்ப்பினால் தனியார் மயத் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாரத் பெட்ரோலியம், முன்பு பூம்ரா செல் (Bumrah Shell) என்கிற பெயரில் இருந்தது. 1970-களில் தான் அரசுடைமை ஆக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.