பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின், 13,000 இணைப்பகங்களை மூட, இந்த நிறுவனத்தின் ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாம்.
அதிலும் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள இந்த இணைப்பகங்களில், வருவாய் என்பது மிக மிகக் குறைவு என்பதால், இந்த தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு இதன் மூலம் 3000 கோடி ரூபாய் மிச்சமாகும் என்பதே இவர்களின் கோரிக்கையாகவும் உள்ளதாம்.
மேலும் இவ்வாறு வருவாய் குறைந்த பகுதிகளை விரைவில் மூட வேண்டும், இங்குள்ள ஊழியர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும், இதற்காக செலவிடும் பணத்தை, வேறு நல்ல வருவாய் வரும் இடங்களுக்கு செலவிட வேண்டும் என்றும் இச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாம்.
மேலும் இதன் மூலம் வருவாயும் அதிகரிக்கும், செலவினங்களும் குறையும் என்பதே இவர்களின் வாதமாக உள்ளது. இதோடு மீதமுள்ள பகுதிகளுக்காவது சிறந்த சேவையை கொடுக்க முடியும் என்பதே இவர்களின் வேண்டுகோளாகவும் இருக்கிறது என்றும், சஞ்சார் நிகார் நிர்வாகிகள் சங்கம், பி.எஸ்.என்.எல்லின் தலைவர் பி.கே புர்வாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது.
மேலும் இந்த சங்கம் பி.எஸ்.என்.எல்லின் சுமார் 40 சதவிகிதம் இணைப்பகங்கங்களை மூட கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் இருப்பதாகவும், இந்த இணைப்பகங்களில் வரவை விட செலவுகள் அதிகம் இருப்பதாகவும், இது நாங்கள் சமூக சேவை அளித்து வருவது போல் இருக்கிறது என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதன் மூலம் 3000 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும், இந்த தொகை ஏற்கனவே பல பிரச்சனைகளில் உள்ள இந்த நிறுவனத்திற்கு, மிக உதவும் என்றும் இந்த சங்கம் அறிவித்துள்ளது.
தற்போது பி.எஸ்.என்.எல்லுக்கு மொத்தம் 31,611 இணைப்பகங்கள் உள்ளதாகவும், இதில் சுமார் 60 சதவிகிதம் இணைப்பகங்கள் கிராமப்புறங்களில் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வரும் இந்த நிறுவனம், இவ்வாறு செலவினை குறைக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் இந்த நிறுவனம் அறிவித்துள்ள தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தின் மூலம், சுமார் 20,000 ஊழியர்களாவது குறைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.