இந்தியப் பொருளாதாரம் பற்றிய செய்திகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல், சாதாரண நாளிதழ்களில் கூட தினமும் தலைப்புச் செய்திகள் ஆகிக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தொடங்கி உற்பத்தித் துறை, சேவைத் துறை வரை எல்லா பக்கமும் இந்த பொருளாதார நெருக்கடியை உணர முடிகிறது. குறிப்பாக வேலை வாய்ப்புகளில் உணர முடிகிறது.
ஆனால் அரசு தான் இன்னும் இந்தியா பொருளாதார மந்த நிலையில் இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இப்போது சர்வதேச பன்னாட்டு நிதியமான IMF அமைப்பே இந்தியாவை எச்சரித்து இருக்கிறது.
பலவீனம்
இந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதற்கு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான நெறிமுறைகள் நிலையற்ற தன்மையில் இருப்பதும், சுற்றுச்சூழல் சார்ந்த நெறிமுறைகள் மற்றும் கொள்கைகள் நிலையில்லாமல் இருப்பதையும் காரணமாகச் சொல்கிறது IMF என்கிற சர்வதேச பன்னாட்டு நிதியம். அதோடு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலும் நிலவும் பலவீனத்தையும் சுட்டிக் காட்டி இருக்கிறது.
புதிய கணிப்புகள்
2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருக்கும் என முதலில் கணித்து இருந்தது IMF. அதன் பின் இந்தியாவில் நிலவிய பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு 7 சதவிகிதம் வரை வளர்ச்சி காணலாம் என தன் கணிப்பை திருத்திக் கொண்டது IMF. இப்போது நிலவும் மோசமான பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு மீண்டும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை குறைத்துக் கொள்ள இருப்பதாகச் சொல்லி இருக்கிறது IMF.
கணக்குகள்
இந்தியாவில் உற்பத்தித் துறை மற்றும் விவசாய உற்பத்தி போன்றவைகள் பெரிய அளவில் குறைந்து இருப்பது தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு காரணம் எனச் சொல்லி இருக்கிறது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம். 2019 - 20 நிதி ஆண்டில் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையான 3 மாத காலத்தில் இந்தியப் பொருளாதாரம் 5 % மட்டுமே வளர்ச்சி கண்டது. இது கடந்த 2012 - 13 நிதி ஆண்டின் ஜூன் 2012 காலாண்டில் கண்ட 4.9 % வளர்ச்சியை ஒட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தான் இந்தியப் பொருளாதாரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத சரிவை கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
காரணிகள்
இந்த கால கட்டத்தில் நுகர்வோர் தேவை சரிந்து இருப்பது, இந்தியாவுக்குள் தனியார் முதலீடுகள் வரத்து பெரிய அளவில் குறைந்து இருப்பது, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற உலகின் இரண்டு பெரிய பொருளாதாரத்துக்கு இடையில் நடக்கும் வர்த்தகப் போர், தொழில்முனைவோர்களுக்கு மத்தியில் சரிந்து இருக்கும் பிசினஸ் செண்டிமெண்ட் போன்றவைகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையை மோடி அரசு கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொண்டு தன் கொள்கைகளை நிலையாக வைத்திருந்தால் நன்றாக இருக்கும். இல்லை என்றால் யாராலும் நம் இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது.