இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு எப்படி அமெரிக்க வேலை கனவாக உள்ளதோ, அதேபோல் படிப்பதற்கும் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவோடு கடுமையாக இந்திய மாணவர்கள் உழைத்து வருகின்றனர். அப்படி வெளிநாட்டுக் கல்லூரியில் சீட்டு கிடைத்துப் படித்து முடித்தாலும் வேலை கிடைக்கச் சில மாதங்கள் வேண்டும்.
இதை உணர்ந்த பிரிட்டன் அரசு, அரசு அங்கிகாரம் பெற்ற கல்லூரியில் படித்து முடித்த மாணவர்கள் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் 2 வருடம் பிரிட்டன் நாட்டிலேயே தங்கி வேலை தேடவும், வேலை பார்க்கவும் விசா கொடுப்பதாக அறிவித்துள்ளது.
இது இந்திய மாணவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்றால் மிகையாகாது. அமெரிக்காவில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் இந்த நேரத்தில் பிரிட்டன் அரசின் இந்த அறிவிப்பு பல வாய்ப்புகளை இந்தியர்களுக்கு உருவாக்கித் தரும்.
போரிஸ் ஜான்சன்
இப்புதிய விதிகள் அடுத்த ஆண்டு முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 2012இல் முன்னாள் பிரதமர் தெரசா மே ரத்து செய்த திட்டத்தை மீண்டும் போரிஸ் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் பிரிட்டன் நாட்டில் பல தரப்பட்ட வேலைவாய்ப்புகளும், வர்த்தகமும் உருவாகும்.
தெரசா மே
2012இல் தெரசா மே பிரிட்டன் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்த 2 வருட வொர்க் விசாவை ரத்துச் செய்தார். இதன் பின் பிரிட்டன் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்தது. அதிலும் முக்கியமாக இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வொர்க் விசா
2 வருட வொர்க் விசா அறிவிப்பின் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் அறிவியல், கணக்கு, தொழில்நுட்பம், என்ஜினியரிங் என எந்தப் பாகுபாடும் இன்றிப் பிரிட்டன் கல்லூரியில் பட்டம் பெற்ற பின் 2 வருடம் பிரிட்டன் நாட்டில் தங்கி வேலைவாய்ப்பையும் அனுபவத்தையும் பெற முடியும்.
வரவேற்பு
அனைத்திற்கும் தாண்டி பிரிட்டன் மீண்டும் வெளிநாட்டுத் திறன்களை ஈர்க்க துவங்கியுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரிட்டன் நாடு ஐரோப்பாவில் இருந்து விலகத் திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த அறிவிப்பு மொத்தத்தையும் மாற்றிவிட்டு.
இனி இந்திய மாணவர்களுக்கும், இந்தியர்களுக்கும் நல்ல காலம் தான்.