ராஞ்சி : விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தையும் தொடங்கி வைத்தவர் இது டிரைலர் தான் இன்னும் முழுப்படமும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயனடைவார்கள் என்றும், 18 முதல் 40 வயது உடைய விவசாயிகள் இத்திட்டத்தில் சேரலாம் என்றும், இதன் படி அந்த நபர் 60 வயதுக்கு பிறகு அவர்களுக்கு குறைந்த பட்சம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர இன்னும் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, மோடி 2.0 அரசின் சாதனைகள் பற்றி பேசுகையில், இது வெறும் டிரைலர் தான், இன்னும் மெயின் பிக்சர் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
வளர்ச்சியே எங்கள் குறிக்கோள்
மோடி அரசின் 100 நாள் சாதனைகள் பற்றி பேசிய அவர், நாட்டை முன்னேற்ற அனைத்து வகையிலும் பாடுபடுவோம் என்றும், நாட்டின் வளங்களை சுரண்டுபவர்களுக்கு எதிராகவும் செயல்படுவோம் என்றும், நாட்டின் வளர்ச்சி தான் எங்களின் முக்கிய குறிக்கோள் என்றும் கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் மற்றும் கடை உரிமையாளர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கான ஓய்வூதிய திட்டங்களை தொடங்கி வைத்தவர். மாநில சட்டசபைகளுக்கான வளாகத்தையும் திறந்து வைத்தார். மேலும் மல்டி மாடெல் கார்கோ என்ற சரக்கு முனையத்தையும் திறந்து வைத்தார்.
மேம்படுத்த இலக்கு
மேலும் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை பற்றி பேசிய மோடி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை மேம்படுத்த இலக்கு வைத்துள்ளதாகவும், இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், கூறியுள்ளார். அரசினால் வழங்கப்பட்ட நலத்திட்டத்தினை பற்றிய புள்ளிவிவரங்களை மறுபரீசிலனை செய்தவர், ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தினால், கடந்த ஒரு வருடத்தில் 44 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியிள்ளார்.
மோடி அரசின் சாதனைகள்
இது தவிர பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டபட்டுள்ளன என்றும், 10 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது என்றும், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 8 கோடி எல்.பி.ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இது தவிர பழங்குடி மாணவர்களின் கல்விக்காக, ஒவ்வொரு ஆண்டும், அரசு 1 லட்சம் ரூபாய் செலவிடும் என்றும் கூறியுள்ளார்.
இது தான் முதல் காகிதமற்ற அசெம்பிளி
கடந்த 2000ம் ஆண்டு பீகாரிலிருந்து பிளவுப்படுத்தப்பட்ட ஜார்கண்ட் மாநிலம், பழங்குடிகள் ஆதிக்கம் மாநிலமாக விளங்குகிறது. இந்த நிலையிலேயே இந்த சட்ட சபைக்கான கட்டிடம் தற்போது கட்டப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு மாடிகளை கொண்டிருக்கும் இந்த கட்டிடம் கட்ட 465 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என்றும், மேலும் நாட்டின் முதல் காகிதமற்ற அசெம்பிளி என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
என்னென்ன திட்டங்கள்
பிரதான் மந்திரியின் கிஷான் மன் தன் யோஜனா திட்டம், சிறு குறு விவசாயிகளுக்கு உதவும் இந்த திட்டம், இது விவசாயிகள் 60 வயதை தாண்டும் போது, அவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் என்றும், இதற்காக 18 - 40 வயதுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. இதே போல் கடை உரிமையாளர்களுக்கான பிரதான் மந்திரி லகு வியாபாரி மன் தன் யோஜனா திட்டத்தினையும் தொடங்கி வைத்துள்ளார். மேலும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஸ்வரோஜ்கர் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மூலமும் பயனாளர்கள் 60 வயதிற்கு மேல் மாதம் 3000 ரூபாய் பெற முடியும் என்றும், இதற்கு 18 - 40 வயதுடையோர் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இது தவிர 462 பள்ளிகளுக்கு ஏக்லவ்யா மாதிரி பள்ளிகளுக்கு மோடி ஆன்லைனிலயே அடிக்கல் நாட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கு வேண்டுகோள்
பொருளாதார மந்த நிலையால் மழுங்கி வரும் இந்தியாவின் நிலையை பலரும் எச்சரித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடி அரசு பழி வாங்கும் அரசியலை விடுத்து, பொருளாதார சீரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறிய நிலையில், அதை பற்றியும் மோடி அரசு சிந்திக்க வேண்டும் என்பதே, பல தலைவர்களின் கருத்தாக உள்ளது.