மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மதியம் சுமார் 2.30 மணிக்கு டெல்லியில் பத்திரிகையாளர்களை மீண்டும் சந்திக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த முறை பொருளாதாரத்தை சீர் செய்ய மேலும் சில நடவடிக்கைகளை அறிவிக்க இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதோடு ஏற்கனவே ஆகஸ்ட் 23, 2019 மற்றும் ஆகஸ்ட் 30, 2019 ஆகிய தேதிகளில் அறிவித்த பொருளாதார சீர் திருத்த அறிவிப்புகள் எல்லாம் எந்த அளவுக்கு பயன் கொடுத்து இருக்கிறது என்கிற கருத்துக்களையும் பகிர இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒவ்வொரு துறை சார்ந்த தீர்வுகள் மற்றும் இலக்குகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் வீடுகள் விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு கட்டி முடித்த வீடுகள் விற்க முடியாமல் பில்டர்கள் எல்லாம் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதோடு இந்தியாவில் ஒரு கணிசமான எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்பதும் இந்த ரியல் எஸ்டேட் துறை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களைத் திரும்பிப் பார்த்தால், கடந்த ஜனவரி 2019 முதல் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி நான்கு முறை தன் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறார்கள். தற்போது மத்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகிதம் 5.4 சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவில் உள்நாட்டிலேயே பொருளாதார மந்த நிலை இருப்பது, உலக பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் அமெரிக்க மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் காரணமாக உலகமே ரெசசன் பயத்தில் உறைந்து போய் இருப்பது போன்ற காரணங்களால் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் பொருளாதார அறிஞர் மன்மோகன் சிங் "இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிவு மற்றும் மந்த நிலைக்கு பணமதிப்பிழப்பு & மோசமாக நடைமுறைப்படுத்திய ஜிஎஸ்டி தான் காரணம்" எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்திய பொருளாதார மந்த நிலையை மேம்படுத்த மன்மோகன் மோடி அரசுக்கு 5 அறிவுரைகளையும் கொடுத்தார் என்பது கவனிக்கத்தக்கது. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நிர்மலா சீதாராமன் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பார்..? இன்னும் சில நிமிடங்களில் அவரே சொல்வார்.