டெல்லி : பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், ஏற்கனவே கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் நிலையில், கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் செயல்பாட்டு நஷ்டமாக (operating loss) 4,600 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இழப்பானது அதிகளவிலான எரி பொருள் விலை, அன்னிய செலவாணி விகிதம் இவற்றால் நஷ்டம் கண்டுள்ளது என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், நடப்பு நிதியாண்டில் இந்த செயல்பாட்டு லாபமானது, லாபத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் வலுவான போட்டி, நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் வர்த்தகம் மிக மோசமாக இருந்ததாகவும், இதனால் இந்த நிறுவனம் மொத்தம் கடந்த 2018 - 2019-ல் மட்டும் சுமார் 8,400 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளதாகவும், இதன் மொத்த வருவாய் சுமார் 26,400 கோடி ரூபாயாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதே மற்றொரு மூத்த அதிகாரி இது குறித்து கூறுகையில், ஏர் இந்தியா 2019 - 2020ம் நிதியாண்டில் அதன் செயல்பாட்டு லாபம் 700 - 800 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அதிலும் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தாலும், மேலும் அன்னிய செலவாணியில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தால் இது சாத்தியம் என்றும், அப்படி இல்லை என்றால் ஏர் இந்தியா செயல்பாட்டு நஷ்டமாக 175 - 200 கோடி ரூபாய் வரை காணலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஜூன் மாதத்தில் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால், இந்திய விமான நிறுவனங்களுக்கு அதிக செலவினையே கொடுத்தது. அந்த சமயத்தில் ஏர் இந்தியாவுக்கு தினசரி 3 - 4 கோடி ரூபாய் இழப்பையே ஏற்படுத்தியது என்றும் மூத்த அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதிலும் பாலகோட் வான்வெளித் தாக்குதலுக்கு பின்னர் மட்டும் ஏர் இந்தியாவுக்கு 430 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளனர். எனினும் தற்போது 41 சர்வதேச விமான தளங்களுக்கும், 72 உள்நாட்டு விமான தளங்களுக்கும் செல்லும் விமானங்களால், பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வருவாயும் சற்று அதிகரித்து வருகிறது. இது வரவிருக்கும் மாதங்களிலும் வருவாய் இப்படி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.