மும்பை : ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் மந்த நிலையால் நடப்பு ஆண்டில் விற்பனை வெறும் 5- 7 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி காணும் என்றும் கேர் ரேட்டிங்ஸ் மதிப்பிட்டுள்ளது.
ஒரு புறம் இத்துறைக்கு சாதகமான செய்திகள் ஏதும் வராதா என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், கடன் தகுதி நிர்ணய நிறுவனமான கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் (2019 - 2020) வாகன விற்பனை வளர்ச்சியானது வெறும் 5 - 7 சதவிகித வளர்ச்சி மட்டுமே காணும் என்று கூறியுள்ளது.
இதே கடந்த ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியினை கொண்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
ஏன் இந்த சரிவு?
அதிக வாகன விலைகள், அதிகப்படியான இன்சூரன்ஸ் கட்டணங்கள், நிதி சமபந்தமான பிரச்சனைகள், புதிய வாகன விதிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் நடப்பு நிதியாண்டில் வாகன விற்பனையானது வெறும் 5 - 7 சதவிகிதம் தான் இருக்கும் என்றும், இது கடந்த ஆண்டு இரட்டை இலக்க வளர்ச்சி கொண்டிருந்தது என்றும், ஆக நடப்பு நிதியாண்டில் வளர்ச்சியானது ஒன்று இலக்கமாக குறையும் என்றும் கேர் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடும் வீழ்ச்சி
நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், வாகனங்கள் விற்பனையானது பெரும் சரிவைக் கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகன விற்பனையானது 13.3 சதவிகிதம் குறைந்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனையானது 14.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடந்த 1993ம் நிதியாண்டில் இதே காலத்தில் 13.3 சதவிகிதம் வீழ்ச்சி காணப்பட்டது. இதனுடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கு ஆண்டு வாகனங்கள் விற்பனையானது 21 சதவிகிதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சரிவுக்கு இது தான் காரணம்
புதிய பாதுகாப்பு விதிமுறைகள், அதிக காப்பீடு மற்றும் உரிமையாளர் செலவுகள், என்.பி.எஃப்.சி துறையில் ஏற்பட்டுள்ள பணப்புழக்க நெருக்கடி மற்றும் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்களுக்கான சுமை சுமக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக 15 - 20 சதவிகித விலை உயர்வு மற்றும் வாகனங்கள் இயக்கத்தில் கட்டுபாடுகள் உள்ளிட்ட பல் காரணங்களால் விற்பனை வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
விற்பனை வீழ்ச்சி
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வளர்ச்சி முறையே 1.8 சதவிகிதம் மற்றும் 9 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் வர்த்தக வாகனங்கள் விற்பனையானது, 0.3 சதவிகிதம் குறைந்து, 7.4 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. தேவை குறைவின் காரணமாக வர்த்தக வாகனம் மற்றும் பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சியானது, முறையே 21.5 மற்றும் 18.8 சதவிகிதம் விற்பனை சரிவடைந்துள்ளது.
டிராக்டர் விற்பனை மட்டும் அதிகரிக்கலாம்
சரியான பருவமழை மற்றும் பரவலான மழை காரணமாக, ஒட்டுமொத்த வாகன விற்பனை சரிந்தாலும், டிராக்டர் விற்பனையானது களைகட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் தற்போது மத்திய அரசு வாகன விற்பனையை அதிகரிக்க சில சலுகைகளை கொடுத்துள்ள நிலையில் இவ்விற்பனையானது மேலும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆக ஒட்டுமொத்த சரிவிலும், டிராக்டர் விற்பனை மட்டும் அதிகரிக்கும் என்றும் கேர் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
அடுத்த காலாண்டுகளில் விற்பனை அதிகரிக்கலாம்
மேலும் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனையானது 12.2 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது நடப்பு நிதியாண்டிலும் விற்பனை மந்தம் தொடரும் நிலையிலும், மூன்றாவது காலாண்டில் ஆவது விற்பனை அதிகரிக்கும் என்றும், ஏனெனில் பண்டிகை சீசன் ஆரம்பிப்பதால் விற்பனை அதிகரிக்கலாம் என்றும், மேலும் பி.எஸ் 6 புதிய விதிகளும் விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதால், புதிய வாகனங்கள் அறிமுகமும் நிறைய இருக்கும் என்பதால், விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.