டெல்லி : மோடி 2.0 அரசின் ஆரம்பத்தில் இருந்தே பொருளாதார மந்தம், வேலையின்மை, வேலையிழப்பு என மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், சவுதி அராம்கோ தாக்குதல் பிரச்சனையாலும் இந்தியா தான் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளரான சவுதி அரேபியாவின், எண்ணெய் ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்குதல், அந்த நாட்டினை மட்டும் அல்லாது, உலக நாடுகள் அனைத்தையுமே அதிர வைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு இது பெரும் அடியாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
உலகின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான சவுதியில், சவுதி அரசால் நடத்தப்படும் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமே சவுதி அராம்கோ நிறுவனம், இது கடந்த சனிக்கிழமையன்று, அதிகாலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
எண்ணெய் வர்த்தகம் பாதிப்பு
இது தாக்கப்பட்டது சவுதியில் என்றாலும், இதன் எதிரொலி உலக நாடுகளில் அனைத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இந்த தாக்குதல் பிரச்சனையால் வளைகுடா பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. உலகின் எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது நாடான சவுதியிலேயே இப்படி நடந்திருக்கிறது எனில், இது மற்ற நாடுகளில் சொல்லவா வேண்டும். அதிலும் குறிப்பாக உலக நாடுகளில் மொத்தம் சப்ளை செய்யப்படும் எண்ணெய் இறக்குமதியில் 5 சதவிகிதம் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரானை குற்றம் சாட்டும் அமெரிக்கா
அதிலும் சவுதி அராம்கோவுக்கு சொந்தமான அப்காய்க் என்ற மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் 10 ஆளில்லா விமானங்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அமெரிக்காவோ இதற்கு ஈரான் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
கவலையில் இந்தியா
இந்த பிரச்சனை காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் எங்கு செல்லுமோ என்று இந்தியாவை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இது ஒரு தவிர்க்க முடியாத விதி விலக்கான நிலைமை, ஆக இதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் இந்திய அரசு சார்ந்த அதிகாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது. ஏனெனில் ஈரானின் எண்ணெய் தடைக்கு பின்னர், சவுதி அரேபியாவின் பங்கு முக்கியமாக உள்ளது. ஏனெனில் இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சப்ளை செய்யும் இரண்டாவது பெரிய இறக்குமதியாளர் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்
ஆக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் கண்டிப்பாக அதன் எதிரொலி இந்திய சந்தைகளிலும் இருக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது எண்ணெய் விலையை அதிகரிப்பதோடு, இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் டாலரில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது நாம் இன்னும் அதிகளவிலான தொகையை செலுத்த வேண்டியிருக்கும், இதனால் இறக்குமதிக்கான தொகை சுமார் 10,700 கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இந்தியா கடந்த 2018 - 2019லியே 111.9 பில்லியன் டாலரை இதற்காக செலவிட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
சவுதியில் இருந்து இவ்வளவு இறக்குமதியா?
இதனால் இந்தியா தான் அதிகளவு பாதிக்கும் என்றும், குறிப்பாக தனது எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்தை சவுதியில் இருந்து தான் இறக்குமதி செய்கின்றது என்றும், இதே 18 சதவிகிதம் சமையல் கேஸ் இறக்குமதி செய்கின்றது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. ஆக சவுதியில் இருந்து இறக்குமதி தடை பட்டுள்ளதால் இந்தியாவில் விலை அதிகரிக்கும் என்பதோடு, சர்வதேச அளவில் விலை இன்னும் அதிகரிக்கும் போது, இது இன்னும் உச்சத்திற்கே செல்லாம் என்றும் கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு பின்னடைவு
ஏற்கனவே அமெரிக்கா சீனா பிரச்சனையால் ஆட்டம் கண்டுள்ள இந்திய பொருளாதாரம், தற்போது சவுதியில் ஏற்பட்ட இந்த பிரச்சனையால் இது மேலும் இந்தியாவுக்கு இது பின்னடைவை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2015ல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையால், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்றும், மீறி வாங்கினால் அவர்களின் மீது பொருளாதார தடையை விதிக்கப் போவதாகவும் அமெரிக்கா மிரட்டியது.
இந்தியாவுக்கு பெரும் தலைவலி
இந்த நிலையிலேயே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை தவிர்த்தன. இந்த நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தியில் பல எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதும், சிறை பிடிக்கப்பட்டதும் தொடர்ந்து அரங்க்கேறி வந்தது. இந்த நிலையில் தான் தற்போது சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் ஆலை குறி வைத்து தாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இது போன்ற பல காரணங்களால் இந்தியாவில் பொருளாதார மந்தம், மெதுவான வளர்ச்சி, வெளிநாட்டு பிரச்சனைகளால் நலிவடையும் பொருளாதாரம் இவற்றோடு, இனி இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையும் பெரிய தலைவலியாக மாறக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
ஈரான் பின்னனியில் இருக்கலாம்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய நிலையில், ஈரானின் எண்ணெய் வர்த்தகம் மொத்தமாக சரிந்துள்ளது. ஆக ஈரானுக்கு பதிலாக எண்ணெய் ஏற்றுமதியை செய்து வரும் சவுதி தாக்குதலில் ஈரான் கூட பின்னணியில் இருக்கலாம் என்றும் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2009ல் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 147 டாலரை தொட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 54.58 - 60.25 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை அதிகரிக்கலாம்
ஒரு புறம் இந்தியாவுக்கு பொருளாதார மந்தம் மட்டுமே கவலையாக இருந்து வந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் இறக்குமதிக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கேமே என்ற கவலையும் சேர்ந்து கொண்டுள்ளது. ஏனெனில் அத்தியாவசிய தேவையான பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றம் இருக்கலாம் என்றும், இதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இப்படியொரு மோசமான நிலையை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது.