டெல்லி : அடிக்கடி பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது சரிந்து வரும் பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்த பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நாட்டில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார மந்த நிலை, முக்கிய தொழில் துறைகள் வீழ்ச்சி, அதிலும் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள படு வீழ்ச்சி, இதனால் பொருளாதார வளர்ச்சியை காட்டும் ஜி.டி.பி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதை சரி செய்யவும், சரிந்துள்ள பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்தவும் அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தொடர்ந்து பல அறிவிப்புகளை கொடுத்து வரும் இவர், டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில், மேலும் பல்வேறு அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
எதற்கு இந்த ரூ.70,000 கோடி
குறிப்பாக வீட்டு வசதி துறைக்கு 20,000 கோடி ரூபாய் மற்றும் ஏற்றுமதி தொழில் துறைக்கு 50,000 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை அறிவித்துள்ளார். வீடு தொடங்கி நிறைவு பெறாமல் நின்று போயுள்ள வீட்டு வசதி திட்டங்களை நிறைவு செய்வதற்காக 20,000 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், இந்த நிதியில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் என்றும், மீத தொகையான 10,000 கோடி ரூபாயை வெளி முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஏற்றுமதி வரியை திரும்ப பெற திட்டம்
ஆக மொத்தம் இதன் மூலம் வீடு வாங்குகிற 3.5 லட்சம் பேர் பலன் பெறுவார்கள் என்றும், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், தளர்த்தப்பட்ட விதிகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கவும் அனுமதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியின் போது செலுத்துகிற வரிகளை திரும்ப பெறுவதற்கான புதிய திட்டமும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
அரசுக்கு இழப்பு
இவ்வாறு ஏற்றுமதியாளர்களை ஊக்கவிப்பதால் அரசுக்கு ஒரு புறம் இழப்பு என்றாலும், மறு புறம் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். அதிலும் அரசுக்கு இந்த திட்டத்தினால் அரசு 50,000 கோடி ரூபாய் விட்டுக் கொடுக்க வேண்டி வரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர ஏற்றுமதிக்கான தொழில் முதலீடுகளை வழங்குகிற வங்கிகளுக்கு, அதிகளவில் காப்பீடு வழங்க ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,700 கோடி அனுமதிக்கப்படும் என்றும், இது வட்டி உள்ளிட்ட ஏற்றுமதி கடன் செலவுகளை குறைக்க உதவும் என்றும், இந்த திட்டத்தினால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பலன் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும் இனி ஷாப்பிங் திருவிழா
ஏற்றுமதி கடன்களுக்கு முன்னுரிமை வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாகவும் கூறியவர், ஏற்றுமதிக்காக கடன்கள் வழங்க 36,000 கோடி ரூபாய் - 68,000 கோடி ரூபாய் வரை ரிசர்வ் வங்கி அளிக்கும் என்றும் கூறியுள்ளார். அதே போல உலக அளவில் மிகப் பிரபலமாக உள்ள துபாய் ஷாப்பிங் திருவிழா போன்று, இந்தியாவிலும் 4 இடங்களில் மெகா ஷாப்பிங் திருவிழாக்கள், அடுத்தாண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக விலை மதிப்புமிக்க ஆபரண கற்கள், நகைகள், கைவினைப்பொருட்கள், யோகா, சுற்றுலா, ஜவுளி, தோல் துறைகளை மையப்படுத்தி இந்த ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.