நாக்பூர் : தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம், இதுவும் கடந்து போகும் என தொழில் துறையினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
விதர்பா என்ற சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடந்த 65ஆவது ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அங்கு உரையாற்றியுள்ளார்.
இக்கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.
துவண்டு போயுள்ள ஆட்டோ மொபைல் துறைக்கு இது கடினமான காலம் தான் என்று குறிப்பிட்ட நிதின் கட்கரி, சர்வதேச பொருளாதார நிலைமை காரணமாக, தேவை மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சர்வதேச அளவில் வர்த்தகத்தில் பிரச்சனை நிலவி வருவதாகவும், இதனால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியவர், இதனால் யாரும் அதிருப்தி அடைய வேண்டாம் எனவும் ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும் வாழ்க்கையில் சில முறை வெற்றியும், சில முறை தோல்வியும் கிடைப்பது வழக்கமான ஒன்று தான், இதற்காக யாரும் துவண்டு போகக் கூடாது என்று கூறியவர், எல்லாம் கடந்து போகும் என்றும் நம்பிக்கையை யாரும் இழக்க வேண்டாம் எனவும் ஆறுதல் கூறியுள்ளார்.
ஒரு புறம் நலிந்து வரும் பொருளாதாரத்தால் தொழில்துறைகள் ஆட்டம் கண்டுள்ள நிலையில், மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் தொழில்துறையை மேம்படுத்தவும், அதனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய நிதிமையச்சர் பல்வேறு சலுகைகளையும், வரி சலுகையினையும் அளித்து வருகிறார். குறிப்பாக கடந்த சனிக்கிழமையன்று ஏற்றுமதியையும், ரியல் எஸ்டேட் துறையையும் ஊக்குவிக்க 70,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அடுத்த வாரம் கோவாவில் நடக்கவிருக்கும் ஜி.எஸ்.டி குறித்தான கூட்டத்தில், ஆட்டோமொபைல் துறை குறித்தான ஜி.எஸ்.டி சலுகை இருக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிலும் தற்போதுள்ள 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விகிதத்தினை, 18 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பதே இத்துறையினரின் வேண்டுகோள்.