மத்திய அரசின் கொள்கை மாற்றத்தால் இந்திய ஆட்டோமொபைல் துறை சாவில் விளிம்பில் நிற்கிறது என்றால் மிகையில் இல்லை. இந்த நிலையை உணர்ந்த மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த கொள்கை மாற்றங்களை வழக்கம் போல் அவசர அவசரமாகத் திரும்பப் பெற்று வருகிறது. இது மட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் துறையை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றப் பல புதிய கொள்கைகளையும் வகுக்கத் திட்டமிட்டு வருகிறது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இந்தியர்களின் மிக முக்கியப் பண்டிகையான தீபாவளி வந்துள்ளது. தீபாவளி என்றால் வர்த்தகச் சந்தைக்குக் கொண்டாட்டம் தான், தள்ளுபடி, முதலீடு, விற்பனை என வர்த்தகச் சந்தை கலக்கலாக இருக்கும்.
ஆட்டோமொபைல் துறை சரிவில் இருக்கும் இந்த நிலையில் கார் விற்பனை நிறுவனங்கள் தீபாவளி பண்டிகையை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக
கார் விற்பனையை அதிகரிக்கும் வகையில் மாருதி சுசூகி மற்றும் டாடா மோட்டார்ஸ் லட்ச ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இணைந்து பொதுத் துறை வங்கிகளை வாகன கடனுக்கான வட்டியைக் குறைக்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இந்தத் தீபாவளி, தசரா, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி தனது கார்களுக்கு 40,000 முதல் 1,00,000 ரூபாய் வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்தத் தள்ளுபடி விபரங்களை மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவின் நிர்வாகத் தலைவர் சாஷாங்க் ஸ்ரீவஸ்தவா அறிவித்துள்ளார். இந்த ஆஃபர் மட்டும் அல்லாமல் தற்போது மத்திய அரசு கார் விற்பனையை ஊக்குவிக்கப் பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் பழைய விலையை விடவும் கிட்டத்தட்ட மாருதி கார்களை 1.5 லட்சம் ரூபாய் வரையில் குறைவான விலைக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதேபோல் நாட்டின் 2வது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு கிட்டதட்ட 1.5 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளார்.
டாடா ஹெக்சா கார்களுக்கு 1,50,000 ரூபாய் தள்ளுபடியும், நெக்சான் கார்களுக்கு 85,000 ரூபாய் தள்ளுபடியும், டியாகோ கார்களுக்கு 70,000 ரூபாய் முதல் 1,15,000 ரூபாய் மதிப்பிலான ஆஃபர்களை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
இதுமட்டும் அல்லாமல் முதல் முறையாகக் கார் வாங்குபவர்களுக்கும், பழைய கார்களை விற்பனை செய்து புதிய டாடா கார்களை வாங்குபவர்களுக்கு டாடா மோட்டார்ஸ் பிரத்யேக ஆஃபரை கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.