இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த, இந்திய மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், இந்தியாவின் 2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி 5 சதவிகிதமாக வந்தது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்து இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.
மத்திய ரிசர்வ் வங்கியோ, 2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 %-ஆக இருக்கும் எனக் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்பிஐ கணித்ததை விட மிக மிகக் குறைவான வளர்ச்சி கண்டிருப்பதால், ஜிடிபி கணக்கிடுவதில் ஆர்பிஐ எதை தவற விட்டது, என்ன தவறு நடந்து இருக்கிறது எனக் கண்டு பிடிக்க, ஜிடிபி கணக்கீடுகளை மறு பரிசீலனை செய்து வருகிறார்களாம்.
அதோடு முன்பை விட மத்திய ரிசர்வ் வங்கி இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சியை இன்னும் உன்னிப்பாக கவனித்து வருகிறதாம். இந்தியாவின் பணவீக்கம் சார்ந்த கணக்கீடுகளில் ஆர்பிஐ கிட்டத் தட்ட சரியாக கணக்கிட்டு இருக்கிறது. அதே போல இந்தியாவின் ஜிடிபி தரவுகளையும் மிகச் சரியாக கணக்கிட விரும்புகிறோம் எனவும் சொல்லி இருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
வழக்கம் போல பத்திரிகையாளர்கள், எப்போது இந்தியப் பொருளாதாரம் மீண்டு வரும், எப்போது நிலைமை சீர் அடையும் எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு சக்தி காந்த தாஸ் ஒரு சரியான காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மாறாக இந்தியாவின், 2019 - 20 நிதி ஆண்டின், இரண்டாவது காலாண்டுக்கான ஜிடிபி தரவுகள் வெளியாக வேண்டும். அப்போது தான் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருக்குமா..? எனச் சொல்ல முடியும் என்கிறார் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
கடந்த பிப்ரவரி 2019 கால கட்டத்திலேயே இந்தியாவில் பொருளாதார மந்த நிலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை உணர்ந்து தான், வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியதைச் சுட்டிக் காட்டி ஆர்பிஐ, தன்னால் முடிந்த வரை இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.