துபாய் : சர்வதேச அளவில் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளரான சவுதி அரேபியாவின், எண்ணெய் ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்குதலுக்கு பின், அந்த நாட்டின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமையன்று, அதிகாலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மறுபுறம் ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என்று அமெரிக்கா ஒரு புறம் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பின்னர் சவுதி அராம்கோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 5 மில்லியன் பேரல்களாக குறைக்கப்பட வேண்டியிருந்தது என்றும் முக்கிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான உற்பத்தி 48 மணி நேரத்திற்குள் மீட்டெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் பாதிப்பு
இந்த தாக்குதலால் உலகின் மிகப்பெரிய கட்டமைப்பை கொண்ட, இந்த உற்பத்தி ஆலையிலிருந்து, உலகின் மொத்த உற்பத்தியில் 10 சதவிகிதம் இங்கு பூர்த்தி செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில், இதன் பாதிப்பு என்ன என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஆக இந்த தாக்குதல் சவுதி அரேபியாவை மட்டு அல்ல, சர்வதேச சந்தையிலும் இதன் எதிரொலி இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
தினசரி உற்பத்தி எவ்வளவு?
தாக்குதலுக்கு உள்ளான இந்த எண்ணெய் உற்பத்தி ஆலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், தினசரி 9.8 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த உற்பத்தியில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தது போக மிகப்பெரிய அளவு சேமித்து வைத்திருந்ததாகவும், அதிலும் உலகெங்கிலும் உள்ள மூன்று இடங்களில் உள்ள சேமிப்பகங்களில் சேமித்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது. நெதர்லாந்தில் உள்ள ரோட்டார்டாம், ஜப்பானில் ஒஹினாவா என்ற இடத்திலும் மற்றொன்று எகிப்திலும் உள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு முதலே இலக்கு
சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மற்றும் எண்ணெய் குழாய்கள் மீதான தாக்குதல் கடந்த ஆண்டு முதலே இலக்காக கருதப்பட்டது. இந்த தாக்குதலுக்காக பெரும்பாலும் ட்ரோங்களே பயன்படுத்தப்பட்டன என்றும், பெரும்பாலும் இது ஏமன் கிளர்ச்சியாளர்களால் தான் இந்த தாக்குதல் நடத்தப்படுகின்றன. மேலும் இந்த தாக்குதலானது பாரசீக வளைகுடா பகுதிகளில் தாக்கம், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளை, ஈரானுக்கு எதிராக தூண்டுவதும், இதனால் எண்ணெய் வினியோகம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
எண்ணெய் வயலும் தாக்குதல்
சவுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட குராய்ஸில் உள்ள எண்ணெய் வயலானது, ஒரு நாளைக்கு 1.45 மில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்யகூடிய திறன் உடையது என்றும், இதே அப்காய்க்கில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில் தினசரி 7 மில்லியன் பேரல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்ய முடியும் என்றும் யு.எஸ் எனர்ஜி இன்ஃபர்மேஷன் கூறியுள்ளது. மேலும் விரைவில் வழக்கம் போல இந்த எண்ணெய் நிறுவனம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும், இப்பிரச்சனை குறுகிய காலத்திற்கே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.