சவுதி அரேபியா அரசு, சவுதி அராம்கோ என்ற மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தை நடத்தி வருகிறது, இந்த நிறுவனம் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும், எண்ணெய் வயல்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் சர்வதேச அளவில் 3-வது பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடந்தியிருப்பது சர்வதேச அளவில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அராம்கோ நிறுவனம், சவுதியின் தலைநகரான ரியாத்தில் இருந்து, 300 கி.மீ. அப்பால் உள்ள புக்யாக் என்ற இடத்தில் உள்ள, அப்காய்க் என்ற மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று உள்ளது. இது தவிர குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் எண்ணெய் வயலையும் குறி வைத்து கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில், 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 80 சதவிகித எண்ணெய்காக சவுதியை மட்டுமே நம்பியுள்ள இந்தியாவுக்கு இது பேரிடியாக இருக்கும். ஏனெனில் சர்வதேச அளவில் விலை அதிகரிக்கும் போது இந்தியாவிலும் தாறுமாறாக அதிகரிக்கும் என்றும், இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையிலேயே அந்த நாட்டு அரசு, இந்தியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. அப்படி என்ன சொல்லியிருக்கிறது என்கிறீர்களா?, இந்தியாவுக்கு சப்ளையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், வழக்கம் போல சப்ளை இருக்கும் என்றும் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆலையில் தாக்குதல் நடந்துள்ளது என்பதற்காக நாங்கள் ஆயில் சப்ளையை நிறுத்த மாட்டோம் என்றும் கூறியுள்ளதாகவும் அறிக்கையில் கூறபட்டுள்ளதாம்.
எனினும் இந்த தாக்குதலால் கிட்டதட்ட பாதிக்கும் மேற்பட்ட உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சனையின் எதிரொலி விரைவில் தெரியாது என்றும், மேலும் இந்த தாக்குதல் மூலம் சேதமடைந்த பகுதிகளை சரி செய்ய இன்னும் சில காலம் ஆகும் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலையான அப்காய்க் என்ற மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் வயலான குராய்ஸ் என்ற இடத்தினையும் 10 ஆளில்லா விமானங்கள் சேதப்படுத்தியுள்ளன என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கட்டமைப்பை உடைய இந்த நிறுவனம், உலகின் 10 சதவிகிதம் எண்ணெயை வழங்க கூடிய அளவினை உடையது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில் இந்த பிரச்சனையை எடுத்துக் காட்டும் விதமாக இந்த நாட்டின் kingdom's benchmark stock index 3.1 சதவிகிதமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.