டேராடூன் : புதிய மோட்டார் வாகன சட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள், ஒரு புறம் இச்சட்டத்தால் அதிகப்படியான அபராத தொகை வசூலிக்கப்படுவதாகவும் இதை குறைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
மறுபுறம் சிலர் இந்த புதிய விதிகளால் விபத்துகள் குறையும், இது நல்ல விஷயம் தான் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சில மாநிலங்களில் இந்த அபராதத் தொகையை குறைத்தாலும், பல மாநிலங்களில், அதிரடியாக களத்தில் இறங்கியுள்ள போலீசார் தீவிரமாக கண்கானித்து வருவதோடு, அபாராதமும் லட்சக் கணக்கில் விதித்து வருகின்றனர்.
அதிகப்படியான அபராதம்
அதிகப்படியான அபராதங்களை அரசு விதிப்பதாக பல புகார்கள் எழுந்து வரும் நிலையில், சமீபத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒடிசாவைச் சேர்ந்தவருக்கு 80,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதே கடந்த வாரம் டெல்லியில், ராஜஸ்தானைச் சேர்ந்த டிரக்கின் உரிமையாளருக்கும், ஓட்டுனருக்கும் சேர்த்து மொத்தம் 1,41,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இவரிடம் சரியான சான்றிதழ்கள் இல்லாமை, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டியது, இன்சூரன்ஸ் இல்லாமை, குறிப்பாக அதிக பாரம் ஏற்றி வந்தமைக்காகவும் இந்த அபராதம் விதிகப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மாட்டு வண்டிக்கு கூட அபராதம்?
ஆனால் இதெல்லாம் கூட ஏற்றுக் கொள்ள கூடிய காரணங்களாக இருந்தாலும், உத்தர காண்டில் தனது வயல் ஓரத்தில் மாட்டு வண்டியை நிறுத்தி சென்ற விவசாயிக்கு 1000 ரூபாய் விதித்துள்ளது அம்மாநில காவல்துறை.
இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதலே புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 நடைமுறை படுத்தப்பட்ட பின்னர், மிகக் கடுமையான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மாட்டு வண்டி வயலுக்கு அருகில் நிறுத்தி வைப்பு
வயல் ஓரத்தில் நிறுத்தியிருக்கும் மாட்டு வண்டிக்கு அபராதம் விதித்துள்ளது விவசாயிகளிடையே சற்று கடுப்பை கிளப்பியுள்ளது என்றே கூறலாம். உத்தரகாண்டில் சார்பா கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரியாஸ் ஹாசன். இவர் தனக்கு சொந்தமான மாட்டு வண்டியை வயலுக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பங்கஜ் குமார் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் மாட்டுவண்டியை பார்த்ததும், தங்கள் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
புதிய விதிகளின் படி மாட்டு வண்டிக்கு அபராதம் இல்லையே!
அக்கம் பக்கத்தில் விசாரிக்கையில் அது ரியாஸ் என்பவருடையது என கண்டறியப்பட்டது. ஆனால் காவல் துறையினர் இதோடு விடவில்லை, தேடி பிடித்து அவரது வீட்டிற்கே, அவரது வண்டியினை கொண்டு சென்று ரியாசிடம் ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான ரியாஸ், இது குறித்து கூறுகையில் மாட்டு வண்டியை என் வயலுக்கு வெளியில் தான் நிறுத்தி வைத்திருந்தேன். இதற்கு எதற்காக அபராதம் விதிக்கப்பட்டது என தெரியவில்லை. மேலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மாட்டுவண்டி வராத போது அதற்கு எதற்கு அபராதம்? என குழம்பினேன். பின்னர் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தேன் என்றும் கூறியுள்ளார்.
தவறான அனுமானம்
அப்போது அவர்கள் மணல் கடத்தும் மாட்டு வண்டிகளில் இதுவும் ஒன்று என அவர்கள் நினைத்ததாகவும், பில் புக் மாறியதாலும் தவறு நடந்துவிட்டதாகக் கூறி கட்டணத்தை திருப்பிக் கொடுத்ததோடு, கட்டண ரசீதையும் கேன்சல் செய்தனர் எனவும் ரியாஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications